india

img

பெகாசஸ் விவகாரத்தில் பதிலளிக்காமல் மக்களவை ஜூலை 26 வரை ஒத்திவைப்பு.... மோடி அரசுக்கு எதிர்ப்பு.....

புதுதில்லி:
பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நாடாளுமன்ற மக்களவை ஜூலை 26 திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில் பதிலளிக்காமல் ஓடிஒளியும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் என்எஸ்ஓ உளவு அமைப்பின் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள்,நீதிபதி  உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகி, அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸைச் சேர்ந்த அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இந்த ஒட்டுக்கேட்பைக் கண்டுபிடித்துள்ளன. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

நாட்டையே உலுக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. பெசாசஸ் விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்லியாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மதிப்பளிக்காமல், பதிலளிக்காமல் உள்ளது. 

இந்நிலையில் ஜூலை 23 அன்று மக்களவையில் பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதற்கு பதிலளிக்காமல் அவை இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி முழக்கமிட்டதால், பதிலளிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ள  மக்களவையை திங்கட்கிழமை வரை ஒத்தி வைத்தனர்.மக்களவையை  திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார்.

;