மோமோஸ் சாப்பிட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டில் உருவான மோமோஸ் என்ற உணவு, அதற்கு அண்டை நாடான இந்தியாவில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக டார்ஜிலிங், லடாக், சிக்கிம், அசாம், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரபலமாக காணப்பட்ட இந்த உணவு, தற்போது தென் தமிழகத்திலும் வர தொடங்கியுள்ளது.
அந்தவகையில், அண்மையில் டெல்லியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோமோஸை அப்படியே சாப்பிட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சுவாசக் குழாயில் மோமோஸ் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். எனினும், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக இதயச் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியிட்ட அறிவுறுத்தலில், வாயில் வைத்தவுடன் வழுக்கி செல்லும் மோமோஸின் தன்மையும், அதன் சிறிய அளவுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக் காரணம். அதனால் மோமோஸ் சாப்பிடும்போது அதை நன்றாக மென்று உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.