india

img

ரயில் கட்டண உயர்வு குறித்து பி.ஆர்.நடராஜன் கேள்வியும் ஒன்றிய அரசின் விசித்திரமான பதிலும்

தில்லி, ஏப்ரல் 4- ரயில் கட்டண உயர்வு சுமார் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறதே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய அரசு விசித்திரமான முறையில் பதிலளித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், தெற்கு மண்டல ரயில்வேயில், குறிப்பாக சேலம் ரயில்வே கோட்டத்தில், மார்ச் 2020 மார்ச்சிலிருந்து அனைத்து சாதாரண பயணிகள் ரயில்களும் சிறப்பு விரைவு ரயில்களாக மூன்று மடங்கு அதிகரிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணங்கள் என்ன என்றும், குறிப்பாக சேலம் ரயில்வே கோட்டத்தில், சாதாரண மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் மீது, கோவிட் -19 காலத்திற்கு முன்பு இயக்கப்பட்டது போல சாதாரண பயணிகள் ரயில் சேவைகளை இயக்குவதற்கான முடிவுகள் ஏதேனும் அரசு எடுத்துள்ளதா என்றும் ஆம் எனில், அதன் விபரங்கள், இல்லையெனில் அதன் காரணங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். 

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே துறை 23-03-2020இலிருந்து, கோவிட் -19 பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மெயில்/ விரைவு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து முறையான பயணிகள் ரயில்களையும் நிறுத்திவிட்டு குறைந்தபட்ச நிறுத்தங்களோடு கூடிய சிறப்பு ரயில்களை மட்டும் இயக்கியது என்றும், 2021 நவம்பர் முதல், பகுத்தாய்ந்த கால அட்டவணையோடு கூடிய ரயில் சேவைகள் இயக்கப்படுவதோடு வழக்கமான எண்ணிக்கைகளில் அனைத்து மெயில்/ விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன என்றும் ஆனால் பயணிகள் ரயில் சேவைகள் தற்போது சிறப்பு ரயில் சேவைகளாக இயக்கப்படுவதுடன் வகைப்படுத்துதலுக்கு இணங்க கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்றும் பதிலளித்துள்ளார்.

ஆயினும் மூன்று மடங்கு ஏன் உயர்த்தப்பட்டது என்பதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

(ந.நி)