ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேசினாலோ அல்லது சத்தமாக பாடல் கோட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்களில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை ஒன்றிய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேச மற்றும் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இரவு 10 மணிக்கு பிறகு அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். அதேபோல் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் அளித்தால் உடனே ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்கும். அதனைதொடர்ந்து ரயில்வே பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் பயணிகளுடன் பணிவுடன், சாதுர்யமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் தனிமையில் உள்ள பெண்கள் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ரயில்வே ஊழியர்களால் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.