india

img

வேளாண் சட்டங்களை நீங்கள் ரத்து செய்கிறீர்களா, அல்லது நாங்கள் ரத்து செய்யவா? மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை...

புதுதில்லி:
தில்லியை முற்றுகையிட்டு லட்சோப லட்சம் விவசாயிகள் 45 நாட்களுக்கும் மேலாக தீரமிக்க போராட்டத்தை நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் ரத்து செய்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவுபிறப்பித்து ரத்து செய்யவா என்று கடும் எச்சரிக்கையையும் மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் விடுத்துள்ளது.

புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தில்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு ‘இடையூறாக’ இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் உள்ளிட்டவை தொடர்பானவழக்குகள் இணைக்கப்பட்டு திங்களன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாயிகள் போராடிவரும் நிலையில் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏமாற்றம் தருகிறது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள், “விவசாயிகளின் போராட்டத்தை மத்தியஅரசு கையாளும் விதத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. மத்திய அரசு மனு மீது உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. விவசாய சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் பிடித்தால் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும். வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா? வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயார் என்றால் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம். என்ன ஆனாலும் சரி, 3 சட்டங்களையும் செயல்படுத்தியே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்?” என்று கேள்விக்கணை தொடுத்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது:வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத்தடை இல்லை. விவசாயிகள் தொடர்ந்து போராடலாம். போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது.போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும்.வேளாண் சட்டங்களுக்கு எதிராகப்போராடும்விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர். சிலர் தற்கொலை செய்கின்றனர்; வயதானோர், பெண்கள் போராடுகின்றனர்; என்னதான் நடக்கிறது? மத்திய அரசு, விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது? சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா? வேளாண் சட்டங்கள் நல்லது என்று இதுவரை ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை.

யாருடைய ரத்தத்தையும் எங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பவில்லை!இந்திய குடிமக்கள் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க இயலாது. உத்தரவின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என மத்திய அரசு நினைக்கக் கூடாது. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்தால் விவசாயிகள் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். பொது மக்களுக்கு இடையூறு இல்லாதபடி பொதுவான ஒரு இடத்திற்கு போராட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள்; இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் மிகவும் கடுமையான முறையில் கூறினார்கள்.இதைத் தொடர்ந்து ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், 3 புதிய வேளாண்சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதி மன்றம் தடுக்க முடியாது என்ற மத்திய அரசின்அராஜகநிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

;