india

இந்தியாவில் கடன் சுமையில் 50 சதவீத விவசாயிகள்.... ஒன்றிய பாஜக ஆட்சியில் அவலம்...

புதுதில்லி:
விவசாயிகளுக்காகவே உழைக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியல் ,இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 50 சதவீதம் பேர் கடன் சுமையில் உள்ளதாக  ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில்  பல்வேறு மாநில விவசாயிகள் பல மாதங்களாக போராடி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கையை பரிசீலிக்கக்கூட செய்யாத மோடி அரசின் ஆட்சியில்தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

சராசரியாக ஒரு விவசாய குடும்பத்தின் கடன் சுமை ரூ.74,121ஆக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) 2019 ஆம் ஆண்டு ஆய்வு நடத்திஇந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனவே, இப்போது இந்த கடன் அளவு இன்னும் அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு சார்ந்த நிதி அமைப்புகளில் பெற்ற கடன் தொகை 69.2 சதவீதம் ஆகும். இதுதவிர 20 சதவீத  கடன் தனியாரிடம் பெறப்பட்டுள்ளன. மொத்த கடன் தொகையில் விவசாயத்துக்காக பெறப்பட்டவை 57.5 சதவீதம் ஆகும்.

2018-19 ஆம் நிதி ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதாந்திர வருமானம் ரூ.10.218 ஆக உள்ளது. இதில் விவசாய கூலி ரூ.4,063 ஆகவும், பயிர் உற்பத்தி மூலம் ரூ.3,798-ம், கால்நடைகள் மூலமான வருமானம் ரூ.1,582 ஆகவும் உள்ளது. வேளாண் சாராத பிற பணிகள் மூலமான வருமானம் ரூ.641 ஆகவும், குத்தகை மூலமான வருமானம் ரூ.134ஆகவும் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள 83.5 சதவீத குடும்பத்தினரிடம் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ளதும் தெரியவந்துள்ளது.

;