ராமர் பிறந்த தினம் என்று நம்பப்படும் நேற்றைய தினம் ராம நவமி விழா முன்னெடுக்கப்பட்டது. அப்போது ஜார்கண்ட், குஜராத், மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத ரீதியான மோதல் ஏற்பட்டது. இதில் குஜராத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள காம்பத் நகரில் ராம நவமியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகர் நகரிலும் இதேபோன்று நடந்த சம்பவத்தின்போது இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் நடந்துள்ளது.
இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தின் 2 மாவட்டங்களில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது நேற்று மாலை 5.30 மணியளவில் லோஹர்டகா மாவட்டத்தின் ஹிர்டி கிராமத்தில் முதல் மோதல் சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பேசியுள்ள லோஹர்டகாவின் துணை-பிரிவு அதிகாரி அரவிந்த் குமார் லால், “144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மத ரீதியிலான அனைத்து கூட்டங்களும் ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
ராம நவமி ஊர்வலத்தின்போது, இரு குழுக்களும் தங்களுக்குள் கற்களை வீசிக்கொண்டதால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட வழி வகுத்துள்ளது. இரு குழுக்களைச் சேர்ந்த எட்டு பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், பொகாரோ மாவட்டத்தில் உள்ள பெர்மோ பகுதியில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போதும் இரு குழுக்களுக்கு இடையே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கல் வீச்சைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் வாகனங்களுக்கும் வீடுகளுக்கும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் சிவ்பூர் பகுதியில் மோதல் ஏற்பட்டதால், போலீசார் அங்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.