உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கணவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் புலாந்த்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசீம் என்பவர், தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர், தனது மனைவியை குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த காட்சிகள் வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணை மீண்டும் அவரது கணவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது, இந்நிலையில், தாக்குதலால் பலத்த காயமடைந்த அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலின் முதல் வீடியோவில், அந்த பெண் குழப்பமான மனநிலையில் இருப்பதையும், தனது தாயை அழைப்பதையும் காணலாம். என்டிடிவி ஆன்லைன் அறிக்கையின்படி, அடித்ததன் விளைவாக அந்த பெண்ணின் வாயிலிருந்து இரத்தம் வருவதையும், சம்பவத்தின் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்டவர் வாயில் நுரைத்தபடி கட்டிலில் படுத்திருப்பதைக் காண முடிந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி ஊடகங்களில் வெளியான வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள ஹசீமை தேடி வருகின்றனர்.