india

img

பல்கலைக்கழக மானியக்குழு வரைவு வழிகாட்டுதல்களை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கல்வி நிறுவனங்களில் அந்நியப் பல்கலைக் கழகங்களை அனுமதித்திட வழிவகுத்திடும் பல்கலைக் கழக மான்யக்குழுவின் வரைவு வழிகாட்டுதல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அந்நியப் பல்கலைக் கழகங்களும், கல்வி நிறுவனங்களும் 90 நாட்கள் ஒப்புதல் நடைமுறைகளுக்குப்பின்னர் இந்தியாவில் பயிற்சிக் கட்டணங்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கு அனுமதித்து இந்தியாவில் வளாகங்களை அமைத்துக்கொள்ள வசதி செய்திடும் விதத்தில் பல்கலைக் கழக மான்யக்குழு நடவடிக்கைகளை எடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இது, பயிற்சிக் கட்டணங்களை மேலும் உயர்த்திடவும், உயரடக்கு நிறுவனங்களை மேலும் உருவாக்கி நாட்டின் உயர்கல்வி கட்டமைப்பைச் சீர்குலைத்திடவும் இட்டுச் செல்லும்.

இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ள விவரங்களிலிருந்து, இத்தகைய வளாகங்களில் நிறுவப்படும் கல்வி நிறுவனங்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு  மாணவர்களைச் சேர்ப்பதற்கு தங்கள் சொந்த நடைமுறைகளைப் பின்பற்றிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது. மேலும் பயிற்சிக் கட்டணங்களைத் தீர்மானித்துக்கொள்வதற்கும் அதற்கு உச்சபட்ச வரம்பு எதுவும் இல்லை என்றும் அனுமதித்திருக்கிறது.    

மேலும் அந்நிய உயர்கல்வி நிறுவனங்கள் நிதிகளை சர்வதேச அளவில் பரிமாற்றம் செய்துகொள்வதற்கும் அனுமதித்திருக்கிறது. இதற்காக அந்நிய கரன்சி கணக்குகள் வைத்துக்கொள்ளவும், அதன்மூலம் பணம் பரிமாற்றங்கள் செய்துகொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகளும், பல்கலைக் கழக மான்யக்குழுவின் நடவடிக்கைகளும் நாட்டின் கல்வி நடைமுறையின் இறையாண்மையை அரித்து வீழ்த்தும் என்பது தெள்ளத் தெளிவாகும். கடந்த காலங்களில், இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு, தேசிய கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டு,  கடைகள் திறக்கவும்  அனுமதிக்கப்பட்டன. ஆனால் அவற்றின் விளைவுகள் என்ன என்பது குறித்து அதன்பின்னர் பொது வெளியில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவின் உயர் கல்வித்துறை, புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளாலும், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்-லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட கல்வியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு, தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆய்வுகளும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் படிப்பைத் தொடரமுடியாது கைவிட்ட விவரங்கள் (drop outs), கூர்மையாக அதிகரித்திருப்பதாகக் காட்டுகின்றன. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அடித்தட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புவாசலில் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் நடவடிக்கையானது நாடு இவ்வாறு எதிர்கொண்டுள்ள சவால்களைச் சமாளிப்பதற்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை.  

பல்கலைக் கழக மான்யக்குழுவும், அரசாங்கமும் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைவு வழிகாட்டுதல்களை ரத்து செய்திட வேண்டும் என்றும், இது தொடர்பாக ஆசிரியர், மாணவர் அமைப்புகளுடனும், உயர் கல்வியின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்டிருப்பவர்களுடனும் கலந்தாலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழுத்தமாக வலியுறுத்துகிறது.

மேலும், இவ்வாறு பல்கலைக்கழக மான்யக்குழு, மாநில அரசாங்கங்களைக் கலந்தாலோசிக்காமல்  ஒருதலைப்பட்சமாக முடிவு எடுப்பதற்கு, சட்டபூர்வமான உரிமை எதுவும் கிடையாது. இத்தகைய ஒருதலைப்பட்சமான முடிவை உடனடியாக நிறுத்திக்கொள்ள பல்கலைக் கழக மான்யக்குழுவையும், ஒன்றிய அரசாங்கத்தையும்  இணங்க வைப்பதற்கு, நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் தேசபக்த சக்திகளும் முன்வர வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.