india

img

கடந்த 2 ஆண்டுகளில் ஐ.ஐ.டி-யில் இருந்து வெளியேறிய 2,461 மாணவர்கள்

கடந்த 2 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இருந்து 2,461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறி உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாட்டிலேயே தொழில்நுட்ப கல்விக்கு முன்னோடியாக விளங்கும் ஐஐடி-யில்,  பயில வேண்டும் என பல மாணவர்கள், தங்களின் பள்ளி பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்தக் கல்வி நிறுவனங்களில் இருந்து அதிக மாணவர்கள், படிப்பை பாதியிலேயே விடுவது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலங்களவையில் ஆந்திர மாநில எம்பியான விஜயசாய் ரெட்டி, ஐஐடியில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இடைநிற்றல் புள்ளி விவரங்களை தெரிவித்தது. அதில் ஐஐடியில் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2,461 மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வெளியேறி உள்ளதாகவும், இவர்களில் 57% மாணவர்கள் ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐடி-கரக்பூரில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், ஐஐடி டெல்லியில் இருந்து 782 பேரும், ஐஐடி கரக்பூரில் இருந்து 622 பேரும், ஐஐடி மெட்ராஸில் இருந்து 128 பேர் பட்டப்படிப்பை முடிக்காமல் பாதியில் வெளியேறியுள்ளனர்.

மேலும், இந்த இரண்டு ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களிலிருந்து இடைநிற்றல் செய்த மாணவர்களில் 47.5% பேர் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தப் பிரிவை சேர்ந்த 1,171 மாணவர்கள் ஐஐடி நிறுவனங்களிலிருந்து படிப்பை முடிக்காமல் வெளியேறியுள்ளனர். 

ஐஐடி நிறுவனங்களிலிருந்து அதிகளவில் மாணவர்கள் வெளியேறுவதற்கு மருத்துவ காரணங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் வாய்ப்புகள், தவறான படிப்பை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை காரணம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.