‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பது நம் நாட்டில் சாதாரணமாக கூறும் பழமொழி. பாம்பைக் கண்டு மனிதன் நடுங்குவது உண்மைதான். என்றாலும் மனிதனைக் கண்டு பாம்புகள்தான் அதிகம் பயப்படுகின்றன என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். பாம்பு வகைகள் அனைத்துமே பயந்த சுபாவம் உள்ளவை. மனிதனைக் கண்டால் அவை ஓடவே முயற்சிக்கும்; தங்களுக்கு ஏதாவது தீங்குவரும் என்று தெரிந்தால்தான் தற்காப்புக்காக அவை கடிக்க வருகின்றன. அப்படி, பாம்பு கடித்தால் மரணம் தானா? இல்லவே இல்லை; உண்மையைச் சொல்லப் போனால் பாம்பு கடித்ததினால் இறப்பவர்களைவிட பயத்தினால் இறப்பவர்களே அதிகம்! நம் நாட்டில் உள்ள பாம்பு வகைகளில் 100க்கு 97 சதவிகிதம் நஞ்சில்லாதவை. அப்படியிருந்தும் நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1500 பேர் பாம்புக்கடியினால் மரணம் அடைகிறார்கள் என்று உலகச் சுகாதார நிறுவனங்களின் கணக்கு அறிவிக்கிறது. இது ஏன்? பாம்புக்கடித்தால் மரணம் என்ற மனபயம், மருத்துவமனைக்குச் செல்ல மனம் இல்லாத மாந்திரீகரிடம் செல்லும் மனப்பான்மை, தற்காப்புக் காலுறை இல்லாமை ஆகியவை காரணமாகவே நம் நாட்டில், அதிகமானோர் மரணமடைகிறார்கள். இதற்கு, முதலில் பாம்பு பற்றிய அச்சத்தை மனதிலிருந்து நீக்க வேண்டும்; அடுத்து, பாம்புக்கடிக்கு மருத்துவம் உண்டு. அது கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மூன்றாவதாக, பாம்பு இருக்கும் இடம் செல்வோர் தகுந்த காலுறைகளை அணிந்து செல்ல வேண்டும்.
பாம்புகளில் நஞ்சுள்ளவை மிகச் சிலவே. ராஜநாகம், நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், கடல் பாம்பு ஆகியவைதான். நம் நாட்டில் அதிகமாகக் காணப்படும் நச்சுப் பாம்புகள். இப்பாம்புகளிடம் தான் ஒரு மனிதனைக் கொல்லக்கூடிய நஞ்சு உள்ளது. மற்றவைகள் நஞ்சு இல்லாதவை. அப்படி நஞ்சு இருந்தாலும் மனிதனைக் கொல்லக்கூடிய அளவு இல்லை எனலாம். உதாரணமாக, கொம்பேரி மூக்கன் என்று சொல்லப்படும் பாம்பிற்கு நஞ்சு இல்லை. இப்பாம்பு மனிதனைக் கடித்துவிட்டுச் சுடுகாட்டிற்கு உடல் போகும் வரை தொடர்ந்து சென்று பார்த்துக் கொண்டிருக்கும் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதையே ஆனால் மரத்துக்கு மரம், செடிக்கு செடி தாவி ஓடும் தன்மையுள்ளது. இதன் கடியால் மனிதனுக்கு மரணம் இல்லை. நச்சுப்பாம்பு கடிக்கும் பொழுது எப்படி உடம்பில் நஞ்சு ஏறுகிறது? பாம்பின் மேல் தாடை ஓரத்தில் உமிழ் நீர்ச்சுரப்பி உள்ளது. அப்பையிலிருந்து நஞ்சு பல்லிற்கு வர வழி உண்டு. பாம்பு கடிக்கும்போது, பல்லினால் ஏற்படும் காயத்தின் வழியாக அந்த நஞ்சைக் கடித்த இடத்திற்குள் செல்லுகிறது நல்லபாம்பு. கடல்பாம்பு ஆகியவற்றின் நஞ்சு உடலில் பரவும் பொழுது நரம்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்து விடுகிறது. விரியன் பாம்பின் நஞ்சு இரத்தம் உறையும் தன்மையைக் குலைத்து, உடலின் பல பாகங்களிலிருந்தும் இரத்த ஒழுக்கை உண்டாக்குகிறது.
நல்ல பாம்பு கடித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?
கடித்த இடத்தில் வீக்கம் உண்டாகும். வலி அவ்வளவாக இராது. கண் பார்வை மங்கும். கண் இமைகள் பாதியாக மூடும்: கால்கள் தடுமாறும். நாக்குத் தடித்து எச்சில் ஒழுகும், வாந்தி வரும். மூச்சுவிட முடியாமற் போய் நினைவு தடுமாறும் இறுதியில் வலிப்பு ஏற்படும்.
விரியன் பாம்புக்கடியினால் ஏற்படும் விளைவுகள்
கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற பாம்புக்கடிகள் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும். முதலில் வாந்தி ஏற்படும் அதன் பிறகு வாந்தி, சிறுநீர், மலம் இவைகளில் இரத்தம் கலந்து வரும். பாம்பு கடித்த சுமார் 12 மணி நேரத்தில் பல் ஈறுகளில் இரத்தக்கசிவு உண்டாகும். கடித்த இடத்தில் அதிகமான வலியும் எரிச்சலும் ஏற்படும். மேலும் கடித்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். கடல் பாம்புக்கடியினால் ஏற்படும் விளைவுகள் கடித்த இடத்தில் எரிச்சலோ வலியோ இருக்காது. ஆனால், உடல் முழுவதும் வலி உண்டாகும். சிறுநீர் பழுப்பு நிறமாகவோ அல்லது கறுப்பு நிறமாகவோ மாறிவரும். மூச்சுவிடக் கடினமாக இருக்கும். இதன் நஞ்சு பொதுவாக நரம்பு மண்டலத்தைத் தாக்கி, தசைகளைச் செயலிழக்கச் செய்யும் தன்மையுடையது. இதன் காரணமாகவே மரணம் உண்டாகிறது. ஆனால் கடல் பாம்புகள் சுறுசுறுப்பற்றவை அவை கடிப்பதற்குள், அவற்றைப் பிடித்து எறிந்து விடுவது மீனவர்களின் பழக்கம்.
மருத்துவம்
பாம்புக்கடிப்பட்டவருக்கு முதன் முதலாகச் செய்ய வேண்டிய முதலுதவி அவருடைய நிலையைப் பக்குவப்படுத்துவதே ஆகும். காலில் முள் தைத்ததைப் பாம்பு கடித்ததாக நினைத்து மரணம் அடைந்தவர்களும் உண்டு. நவீன மருத்துவத்தில் பாம்புக் கடிக்குச் சிறந்த சிகிச்சை இருக்கிறது என்று ஆடாமல் அசையாமல் இருக்கச் செய்ய வேண்டும் . பயத்தினால் ஓடக்கூடாது. தூங்கும் நிலையில் நோயாளி இருந்தால் அவரை எழுப்பக்கூடாது. மூச்சுவிடச் சிரமம் இல்லாதிருக்கும் வரை பயப்படத் தேவை இல்லை. தலை சற்றுக்கீழாவும், கால் சற்று உயரமாகவும் இருக்க வேண்டும்; தலையை ஒருபுறமாகச் சாய்த்து வைத்திருந்தால், மூச்சுவிட ஏதுவாக இருக்கும். மேலும் வாந்தி வந்தாலும் புரை ஏறாது. கடித்த இடத்தில், காலாக இருப்பின் தொடையிலும், கையாக இருந்தால் முழங்கைக்கு மேலும் கட்டுப் போட வேண்டும். இந்தக் கட்டு மிக இறுக்கமாக இருக்கக்கூடாது. ஏனெனில் இரத்த ஓட்டம் முழுவதுமாக தடைப்பட்டு கைகால்கள் அழுகிவிட ஏதுவாகும். மேலும் கட்டுப்போட்ட நேரம் 1 மணியிலிருந்து 1 1/2 மணி வரை தான் இருக்க வேண்டும். அதற்குள் கடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்நேரத்தில் முடிந்தால் கடித்த பாம்பின் வகையை அறிந்து கொள்வது நல்லது. உடனடி தகுந்த மருத்துவம் பார்க்க இது உதவும். இப்பொழுது பல நாடுகளில் ஒவ்வொரு பாம்பு இனத்திற்கும், தனித்தனி நச்சு மாற்று ஊசிகள் இருப்பினும். நம் நாட்டில் எல்லாப் பாம்புக்கடிகளுக்கும் பொது நச்சுமாற்று ஊசிகளே போடப்படுகின்றன. சிகிச்சை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. அச்சமயத்தில் மந்திரங்கள் செய்வதிலோ, ஐஸ்கட்டிகள், அல்லது பொட்டாசியம் பர்மாங்கனேட் மருந்துகளைத் தேடி அலைவதிலோ, நேரத்தைக் கடத்தாது நோயாளியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிகவும்முக்கியம்.
பாம்புகளினால் மனிதனுக்குத் தீங்குகள் ஏற்படுகின்றன. எனினும் அவற்றால் ஏற்படும் நன்மைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாம்பின் நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் புற்று நோயினால் உண்டாகும் பொறுக்க முடியாதவலியையும் மூட்டுவலியையும் ஒற்றைத் தலைவலியையும் போக்கவல்லது. இரத்த வாந்தி போன்ற நோய்களுக்கும் சிறப்பாக உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் பாம்புகள் நமது நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்களை அழிக்கும் எலிகளைக் கொன்று உழவர்களுக்கு உதவி செய்கின்றன. இவற்றின் தோல் இடுப்பு வார்கள், பைகள், சொகுசான கைப்பைகள் போன்றவை செய்ய உதவுகிறது. பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் கூட அடிக்கக்கூடாதா? அப்படி இல்லை. அதை முற்றிலும் அடிக்க முயல வேண்டாம்; கொன்று குவிக்க வேண்டாம்; அப்படிச் செய்தால் உடல் காக்க உதவும் அதன் நஞ்சு கிடைக்காது. மேலும் எலிகள் பெருகி நமக்கு உண்ண உணவுகூடக்கிடைக்காமல் போக நேரிடும். ஆம் இயற்கைச் சீற்ற த்திற்கு உள்ளா வோம் என்பது திண்ணம்.
தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1