health-and-wellness

img

கவனக் குறைவால் வரும் கவலை தரும் நோய்கள்

மலேரியா நோய்
ஒழித்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த மலேரியா நோய் நம்முன் ஓடிவந்து நிற்கிறது. மலேரியா என்ற வார்த்தைக்கு கெட்டகாற்று என்பது பொருள். இந்நோய் சதுப்பு நிலத்திலிருந்து கிளம்பும் கெட்ட காற்றை சுவாசிப்பதால் வருகிற நோய் என்று கருதப்பட்டது. ஹிப்பாக்கரடீஸ் கி.மு. 426இல் இந்நோய் பற்றிய குறிப்புக்களை அழகாக எழுதியுள்ளார். கிரேக்கப் பேரரசு கூட இந்நோய் காரணமாகத்தான் வீழ்ச்சியடைந்தது என்று சரித்திரம் இந்நோயின் கொடுமை, பரவும் தன்மை ஆகியவற்றைத் தெரிவிக்கிறது. வளர்ந்து வரும் நம்நாட்டில் இந்நோய் மக்களின் வேலைத்திறன் அதிகமாகக் குறைத்து மற்ற எந்தத் தொற்று நோயைக் காட்டிலும் நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டிற்குக் காரணமாக 1938இல் இந்நோய் நம் நாட்டில் பரவியதால் 100 மில்லியன் நோயாளிகள் இறந்து போனார்கள். 1947இல் 75 மில்லியன் நோயாளிகள் இறந்து போனார்கள். ஆகவே இப்பொழுது இந்நோய் நம் நாட்டில் ஒரு சமூகப் பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் உழைத்துத்தான் உண்ண வேண்டும் என்னும் நிலையிலுள்ள ஏழைத் தொழிலாளிகளுக்கே இந்நோய் அதிகமாக வருகிறது. இந்நோய் தாக்கும் குடும்பம் சீரழிந்து, மெலிந்து, நலிந்து போய் விடுகிறது. ஏனெனில் மற்ற நோய்களும் முக்கியமாகக் காசநோய் இந்த நோயாளிக்கு வர அதிக வாய்ப்பு உண்டு. எனவே மலேரியா நோய் காரணமாக விவசாயம், தொழில் துறைகள் போன்றவை நம் நாட்டில் பாதிக்கப்பட்டு பொருளாதாரமே சீர்கெட வாய்ப்பு உண்டாகிறது. ‘பிளாஸ்மோடியம் மலேரியா’ என்ற தொற்றுண்ணி தான் இந்நோய் வரக் காரணமாக உள்ளது. இத்தொற்றுண்ணி நோயாளியின் உடம்பில் சிவப்பு அணுக்களில் வாழ்கிறது. மலேரியா சுரம் கண்ட நோயாளியை, முக்கியமாகப் பெண் பாலைச் சேர்ந்த ‘அனாபிலஸ்’ என்னும் கொசு கடித்து அத்தொற்றுண்ணியைத் தன்னுள் இரத்தத்துடன் உறிஞ்சும். பிறகு அதைத் தன் உடலில் வளர்த்து வருகிறது. இக்கொசு வேறொரு மனிதனைக் கடிக்கும்பொழுது இந்நோயைப் பரப்புகிறது. இக்கொசு கடித்து 14 நாட்கள் கழித்து இந்நோயின் அறிகுறிகள் தென்படும். அப்பொழுது இரத்தச் சோதனை மூலம் இந்நோயைக் கண்டறியலாம். இந்நோய் பரவலாக வரும் இடம் குளிர்ந்த பிரதேசங்கள் ஆகும். மேலும் தொழிலாளிகள், இராணுவத்தில் கூட்டமாக வாழும் இடங்களில் உள்ளவர்கள், சதுப்பு நிலத்தில் வாழ்பவர்கள். நெல்  உற்பத்தியாகும் இடங்களில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்நோய் அதிகமாக வருகிறது. 

இந்நோயின் அறிகுறிகள்
குமட்டல், வாந்தி, தலைவலி, பிறகு உடம்பில் சூடு வந்து அதிகமாகும். உடம்பு இளைத்துவிடும். நிலை தடுமாறும். சுரம் வந்த பிறகு வியர்த்துக் கொட்டும். இதைத் தவிர கல்லீரலும், மண்ணீரலும் பழுதுறும்.

இந்நோய்க்கான தடுப்பு முறைகள்

தடுப்பு முறைகளில் முக்கியமானது கொசு ஒழிப்பதேயாகும். இதற்குச் சாக்கடையிலும், சிறு பள்ளங்களிலும் நீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும். டி.டி.டி பவுடரை சாலைகளில் தெளிக்க வேண்டும். கொசுக்கடியிலிருந்து நம்மைக்  காப்பாற்றிக் கொள்ள கொசுவலை உபயோகிக்க வேண்டும். நோய் வந்த பிறகு இதற்கு மருத்துவமாக ‘குளோராகுவின் மாத்திரைகளை’ மருத்துவர்கள் கொடுப்பது வழக்கம். இம்மருந்து இப்பொழுது இலவசமாக மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது. பல தொல்லைகளுக்குக் காரணமாக இருந்த இந்த நோயை ஒரு கட்டத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் நம் கவனக்குறைவால் மறுபடியும் இந்நோய் திரும்ப இறக்குமதி ஆகிவிட்டது. இதை ஒழிக்கக் கவனமாக இருக்க வேண்டும்.

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1