சிறப்புத் தலையங்கம்
மார்க்சிய - லெனினிய ஒளியில், உலகின் முதல் சோசலிசப் புரட்சியான சோவியத் புரட்சி தந்த உத்வேகத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளை நிலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் கம்பீரமாக உதயமானது. இந்த ஒரு நூற்றாண்டு காலப் பயணத்தில் கம்யூ னிஸ்ட் இயக்கம் செய்துள்ள தியாகம், புரிந்துள்ள சாதனைகள், இந்திய வரலாற்றுக்கு செய்துள்ள பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க ஒன்றாகும்.
சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பெருமைமிகு வரலாற்றோடு இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் பிரிக்க முடியாத பகுதியாக இணைந்துள்ளது.
இந்திய மக்களை கொள்ளையடித்து வந்த பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தின் கொடிய அடக்கு முறையை எதிர்த்து வளர்ந்த இந்த இயக்கம் இன்றளவும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை எதிர்த்து இடையறாது போராடி வருகிறது. உலகின் எந்த மூலையில் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அதற்கெதிராக சினந்து, சிலிர்த்தெழுந்து போராடி வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். விடுதலைப் போராட்டக் காலத்தில் தவணை முறையில் சுதந்திரம் கேட்டு சில கட்சிகள் மனுப் போட்டுக் கொண்டிருந்த நிலையில், பூரண விடு தலையே இந்தியாவின் கோரிக்கை என்று முதன் முதலாக முழக்கமிட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியல், நிலப்பரப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விவாதம் நடந்தபோது இந்தியாவின் பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமானால் மொழிவழி மாநிலங்கள் அமைவதே பொருத்த மாக இருக்கும் என்ற முழக்கத்தை முதலில் முன் மொழிந்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகளே.
இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க பல்வேறு மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் சிந்திய ரத்தம் இன்னமும் காயாமலே இருக்கி றது. விடுதலைப் போராட்டக் காலம் துவங்கி, நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காகவும், உழைக்கும் மக்களுக்கான போராட்டக் களங்க ளிலும், நிலத்திற்கான போராட்டத்திலும், நியாய மான கூலிக்கான அணிவகுப்பிலும், சமூக நீதிக் கான சமர்க்களங்களிலும் சமரசமின்றி கம்யூ னிஸ்ட்டுகள் களமாடி வந்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடுகள், சிறைக் கூடத்தின் சித்ரவதைகள், உயிரோடு எரிக்கப்பட்ட கொடுமைகள் என கம்யூனிஸ்ட்டு கள் செய்துள்ள தியாகம் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும்.
கலை இலக்கியத்தின் இலக்கை மாற்றிய மைத்ததிலும், உழைக்கும் மக்களே பண்பாட்டுக் கூறுகளை முன்னுக்கு கொண்டு வந்ததிலும் வள மானதொரு பங்களிப்பை கம்யூனிஸ்ட்டுகள் செய்துள்ளனர். மதச்சார்பற்ற ஜனநாயக, கூட்டாட்சி தன்மை கொண்ட இந்தியாவை நிலைநிறுத்தவும், எல்லோ ருக்கும் எல்லாமும் கிடைக்கின்ற சோசலிச லட்சி யத்தை இந்தியாவிலும் எய்த இந்தியக் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேரளம், மேற்கு வங்கம், திரிபுராவில் அமைந்த இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசுகள் சரித்திரம் போற்றும் சாதனை களை நிகழ்த்தியுள்ளன. தற்போது கேரளத்தில் நடந்து வரும் இடது ஜனநாயக முன்னணியின் அரசு கடந்த கால சாதனைகளின் தொடர்ச்சி யாகவும், எதிர்கால நம்பிக்கையின் வெளிச்சமாக வும் துலங்கி வருகிறது. இந்த பூவுலகை பாசிச கொடுங்கரத்தின் பிடியிலிருந்து பாதுகாத்த பெருமை உலக கம்யூ னிஸ்ட் இயக்கத்திற்கு குறிப்பாக சோவியத் யூனியனுக்கு உண்டு. இன்றைக்கு நாட்டில் பாசிச, மதவெறிக் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றி புரியும் அட்டூழியங்களுக்கெதிராக கம்யூ னிஸ்ட்டுகள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் இடதுசாரி இயக்கம் நிச்சயம் வெற்றி பெறும்.
காலத்தின் குரலாக, களத்தின் விளைச்சலாக உருவான இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் தன்னு டைய இறுதி இலக்கை அடைந்தே தீரும். சோசலிசப் பெரும் கனவு நனவாகியே தீரும்.