நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒன்றிய பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து காலில் போட்டு மிதித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பயன்படுத் தக்கூடாத வார்த்தைகள் என்று ஒரு பெரும் பட்டி யலை மக்களவை செயலகம் வெளியிட்டது. ஊழல் என்கிற வார்த்தைக்குக்கூட தடை விதித்திருக்கி றது ஊழலில் ஊறித் திளைக்கும் இந்த அரசு.
தங்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று ஊடகங்களை அச்சுறுத்தும் அரசு, அடுத்து சமூக ஊடகங்களையும் குறி வைத்துள்ளது. பத்திரிகை யாளர்களை சந்திப்பதையே நாட்டின் பிரதமர் பாவச் செயலாகக் கருதுகிறார்.
இந்நிலையில் நாட்டு மக்கள் சந்திக்கும் துயரங்களை நாடாளுமன்றத்தில் கூட பேசவிடக் கூடாது என்ற முடிவுக்கு ஒன்றிய ஆட்சியா ளர்கள் வந்திருக்கிறார்கள்.
சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அரிசி, கோதுமை, மோர் உள்ளிட்ட அத்தியாவ சியப் பொருட்களுக்கு அநியாய ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் தொடர் முழுவதும் திங்களன்று இடை நீக்கம் செய்யப்பட்டனர். செவ்வாயன்று மாநிலங்க ளவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் மக்கள் பிரச்ச னையை எழுப்ப முயன்றதற்காக தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பி னர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
சுதந்திர இந்திய வரலாற்றிலேயே நாடாளு மன்ற ஜனநாயகத்தை மோடி அரசு அளவுக்கு கீழிறக்கம் செய்யும் அரசு வேறு இல்லை என்றே கூற முடியும். பல முக்கியமான சட்ட முன்வரைவு களை அவசரச் சட்டமாக கொண்டு வருவது, பிறகு சட்டமாக்கும் போதுகூட உரிய விவாதமின்றி நிறை வேற்றுவது போன்ற அராஜகத்தில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.
சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதோடு மானியமும் நிறுத்தப்பட்டு விட்டது. மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அரிசிக்கும், மோருக்கும் கூட ஜிஎஸ்டி வரியை அதிகரித்து மக்கள் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய அரசு. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக் கக் கூடாதா? இந்தப் பிரச்சனையை எழுப்ப வேண் டியது எதிர்க்கட்சிகளின் கடமை என்றால் அதற்கு பதிலளிக்க வேண்டியது ஆளுங்கட்சி யின் கடமை.
ஆனால் விலைவாசி உயர்வு குறித்து பேசினாலே இடைநீக்கம் என்றால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கதி என்ன என்ற அச்சம் எழுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்து மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும். அதுவே ஜனநாயக வழியாகும்.