நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மாநில அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கட்சி வேறுபாடின்றி அனைத் துக் கட்சிகளின் (பாஜக நீங்கலாக) ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது அந்த மசோதா.
பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியா வில், அந்தந்த மாநில மக்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பத் திட்டங்களும், சட்டங்களும் வகுத்துக் கொள்ள, ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே அதிகாரப் பகிர்வை அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 2016 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முறையற்ற மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தவும், கட்ட ணக் கொள்ளையைத் தடுக்கவும் அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தவும், இந்த தேர்வை ஏற்க விரும்பாத மாநிலங்களை விலக்கி வைக்கவும் பரிந்துரைத்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல் நடந்ததையடுத்து அம்மாநில அரசு, மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று கூறியது.
நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தின் மூலம் நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வு நடை முறைக்கு வருமானால், அதன் விளைவாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடையே மாறுபட்ட நிலைப்பாடு உருவானால் அரச மைப்புச் சட்டத்தின் பிரிவு 254ன் படிமுரண்பாடு களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியது.
அதே தீர்ப்பில், எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியன மாநில அரசிடம் இருந்து கரைந்து போகவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அளித்த பரிந்துரைகளின்படி தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய செயல் கண்டனத்திற்கு உரியது.
ஒத்திசைவு பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து அனுப்பப்படும் மசோதாவை எவ்வளவு விரைவாக அனுப்ப இயலுமோ அவ்வளவு விரை வாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பு வதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 ஆளுநருக்குத் தந்திருக்கும் பொறுப்பாகும்.
ஆனால் அவர், வேண்டுமென்றே மசோதா வைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருந்தது உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதும் ஆகும்.