headlines

img

கானல் நீர்

ஒன்றிய அரசின் 2022 -23 ஆம் நிதியாண்டிற் கான  பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட் அடுத்த நூறு ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வை கொண்டது என்கிறார்  பிரதமர். வலதுசாரி அறிவுஜீவிகள்  காற்றைப் பிடித்து கயிறாகத் திரித்து மலையைக் கட்டி இழுக்கும் மிகப்பெரிய தொலை நோக்கு  என்கிற அளவில் புளகாங்கிதம் அடைகின்றனர். ஆனால் கிட்ட நெருங்கிப் பார்த்தால் அது கானல் நீராகவே கரைகிறது.

உதாரணமாக, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில்  80 லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ஒரு வீடு கட்ட  ஒதுக்கப்பட்டிருக்கும் மொத்த தொகை ரூ.60 ஆயிரம் மட்டுமே. அறுபது ஆயிரம் ரூபாயில் மாட்டுத் தொழுவம் கூட உருப்படியாகக் கட்ட முடியாது. வீடு எப்படிக் கட்ட முடியும்?   இது எப்படி நூறு ஆண்டு தொலைநோக்கு திட்டமாக இருக்க முடியும்? 

இதே காலத்தில் 60 லட்சம் சிறு குறு தொழில் கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களில் மட்டும் வேலையின்மை விகிதம் 7.9 சதவிகிதம் உயர்ந்தி ருக்கிறது. 84 சதவிகிதக் குடும்பத்தினர் வருவாயை இழந்திருக்கின்றனர்.  தனிநபர் வருவாய் கணிச மாகக் குறைந்து, செலவும் குறைந்திருக்கிறது. 4 கோடியே 60 லட்சம் பேர் அதீதமான வறுமைக் குத்  தள்ளப்பட்டிருக்கின்றனர்.  இவற்றுக்கு  தீர்வு காண பட்ஜெட்டில் எந்த திட்டமும்  இல்லை. மாறாக, சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றும் விதமாக சமையல் எரிவாயு, உரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக ளுக்கு வழங்கி வந்த மானியம் மேலும் 39 விழுக்காடு வெட்டப்பட்டிருக்கிறது.  

அதே போல், கடந்த 8 ஆண்டுகளாக விலை வாசி உயர்விற்கேற்ப  தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. இது மாத வருவாய் ஈட்டும் மத்திய தர மக்களுக்கு மோடி அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். ஆனால்  மறுபக்கம் கார்ப்பரேட்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. 2019இல் கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டதால் ஒவ்  வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் கோடி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த  பட்ஜெட்டி லும் கார்ப்பரேட்களுக்கான கூடுதல் வரி 12 விழுக் காட்டிலிருந்து  7 விழுக்காடாக  குறைக்கப்பட்டி ருக்கிறது. எதற்காக இந்த வரிக்குறைப்பு?  என்ன தேவை வந்தது?  கொரோனா தொற்றுக் காலத்தில் கூட 142 கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பு ரூ.23 லட்சம் கோடியிலிருந்து ரூ.56 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஏற்கனவே  டேட்டா சென்டர் வர்த்தகத்தில் கௌதம் அதானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோரின் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் டேட்டோ சென்டர், எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் பிரிவில் சார்ஜிங் இன்ப்ராஸ்ட்ரக்சர், கிரிட் ஸ்கேல் பேட்டரி சிஸ்டம் ஆகியவை ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான  தொலைநோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்ட ஜாக்பாட் பட்ஜெட் ஆகும். இந்தியாவின் 90 விழுக்காடு மக்களுக்கு இந்த பட்ஜெட் கானல் நீர்தான்.