headlines

img

குடும்பங்களை வேட்டையாடும் நவீன ரம்மி

சூதாட்டம், லாட்டரி போன்றவை சட்டப்பூர்வ மாக தடை செய்யப்பட்டிருந்தபோதும், ஆன்லைன் என்ற பெயரில் சூதாட்டம் அமோகமாக அரங்கேறி  வருகிறது. இந்த சூதாட்டச்சுழலில் சிக்கி பணத்தை இழந்து கடனாளி ஆகுபவர்களின் எண்ணிக் கையும், தற்கொலை செய்து கொள்வோரின் எண் ணிக்கையும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம் பொம்மனூரைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட் டத்தில் ஈடுபட்டு கடனாளியானதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் இரண்டு தற் கொலைகளும், ஒரு கொள்ளையும் நடந்துள்ளது. 

சென்னை பெருங்குடி பகுதியைச்சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆன்லைன் சூதாட் டத்தால் பணத்தை இழந்ததோடு நண்பர்களிடம் கடன் வாங்கிச் சூதாடியுள்ளார். கடன் சுமை  காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை  கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் பறக்கும் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளையில் அங்கு பணியாற்றிய டீக்காரம் என்பவர் மனைவியோடு சேர்ந்து கொள்ளை நடந்ததாக நாடகமாடி யுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் டீக்காரம் பணத்தை இழந்ததுதான் இதற்குக் காரணம் என்று புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டமெனும் ஆக்டோபசின் கரங்களில் சிக்கி தற்கொலை செய்து கொள்ப வர்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் உண்டு. இளைஞர்கள்தான் இதற்கு அதிகமாக பலியாகி வருகின்றனர். 

இணையதளங்களில் ஆன்லைன் ரம்மி குறித்து இடைவிடாத விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வேறு தேடலுக்காக இணையத்துக்குள் நுழைபவர்களை ஈர்க்கக் கூடிய விளம்பரங்களால் உள்ளிழுத்து பல குடும் பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது ஆன்லைன் ரம்மி. பிரபல தொலைக்காட்சிகளிலும் கூட இந்த சூதாட்டம் குறித்து வெளிப்படையான விளம்பரங்கள் வெளியாகின்றன. 

இந்த நிறுவனங்களால் மோசடி செய்யப்படு வோர்கள் இந்தியாவில் வழக்கு தொடுக்க முடியாத நிலை உள்ளது. வெளிநாட்டு நீதிமன்றங்களில் தான் வழக்கு தொடர முடியும். சில நாடுகள் இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்துள்ளன. சில நாடுகள் வரைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் எந்த வரைமுறையும் இல்லை.

ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இணையத்தில் கருத்துரிமையை பறிக்க காட்டும் அக்கறையில் ஒரு பங்கைக்கூட இத்தகைய மோசடியை தடுப்பதில் காட்டுவது இல்லை. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மனித குல முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, திட்டமிட்டு கொள்ளையடிப்பது தடுக்கப் பட வேண்டும். ஆன்லைன் ரம்மி என்ற நவீன சூதாட்டத்தை முற்றாக தடை செய்ய ஒன்றிய அரசு முன் வரவேண்டும்.