ஒன்றிய அரசின் நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் 2023- 24 பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டதை நியாயப்படுத்தி இருக்கிறார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு பட்ஜெட் 2023-24இல் ரூ. 60000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022 - 23 பட்ஜெட் ஒதுக்கீடை விட 18 சதவீதம் குறைவு. திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 33 சதவீதம்குறைவு. 100 நாள் வேலை தருவதாக இருந்தால் ரூ.2,72,000 கோடி ஒதுக்கீடு வேண்டு மென்ற சமூக செயற்பாட்டு அமைப்புகளின் மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இந்த ஒதுக்கீடு 78 சதவீதம் குறைவு.
இதற்கு ஒன்றிய நிதி செயலாளர் டி.வி.சோமநாதன் தரும் விளக்கம் என்ன தெரியுமா?
“நாங்கள் வேறு இரு திட்டங்களுக்கு ரூ. 40000 கூடுதல் ஒதுக்கீடு செய்துள்ளோம். ஒன்று பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்று வீட்டு வசதி திட்டம், இரண்டு ஜல் ஜீவன் மிசன் என்ற பாதுகாக்கப்பட்ட போதுமான குடிநீர் வழங்கும் திட்டம்” என்கிறார் அவர்.
“வெல்லப் பிள்ளையாரை கொஞ்சம் கிள்ளி பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வது போல” இருக்கிறது மேற்படி சோமநாதனின் வாதம். ஏன் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கீடு குறைப்பு என்று கேட்டால் நாங்கள் வேறு இரு கிராமப்புற திட்டங்களுக்கு கூடுதலாக கொடுத்தோம் என்கிறார்கள். வீட்டு வசதிக்கு கொடுங்கள், குடிநீருக்கு தாருங்கள், ஆனால் அதற்கு நிதி திரட்ட எங்கள் மடியிலேயே ஏன் கை வைக்கறீர்கள்? கார்ப்பரேட் வரியைக் கூட்டுங்கள்; செல்வ வரி போடுங்கள்; சூப்பர் ரிச் வரியை தீட்டுங்கள்; வழியா இல்லை பூமியில்... என்றுதான் கிராமப்புற மக்கள் கேட்கிறார்கள்.
“என்ரேகா சங்கர்ஷ் மோர்ச்சா” (மகாத்மா காந்தி வேலை உறுதித்திட்ட செயல்பாட்டு உறுதி அமைப்பு)என்ற அமைப்பு தரும் மதிப்பீடு இது.
100 நாள் வேலை முழுமையாக அமலாக ரூ 2.72 லட்சம் கோடி ஒதுக்கீடு தேவை; ரூ.1.24 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால் 40 நாட்கள் சராசரியாக வேலை தர முடியும்; மாறாக, இப்போது செய்துள்ள ரூ.60000 ஒதுக்கீடு வெறும் 16.64 சராசரி நாள் வேலைக்குதான் போதுமானது. இதற்கெல்லாம் என்ன பதில்?
கோரிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. இப்போதே ரூ.17000 கோடி கூலி பாக்கி உள்ளது. கூலி தாமதத்தால் வேறு வேலைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறு கின்றன. ஒதுக்கீடு குறைவால் வேலை தேடி வந்த 1.5 கோடி பேர் வெறுங்கையோடு திருப்பி அனுப்பப் பட்டார்கள் என்று ஊடக தகவல்கள் உள்ளன.
நாட்டின் கோடானுகோடி விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் இது. இதற்கு எதிராக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கங்கள் நடத்தும் போராட்டங்கள் வெல்லட்டும்.