headlines

img

கடன் ‘நிவாரணம்’

வங்கிகளில் கடன் வாங்கி  வேண்டுமென்றே கட்டாமல் மோசடி செய்யும் கார்ப்பரேட்களுக்கு உதவிட மோடி அரசு விதிமுறையில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் மீண்டும்  கார்ப்ப ரேட் மற்றும் ஒன்றிய அரசின்  கூட்டுக் களவாணி சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 

கடந்த 6 நிதியாண்டுகளில் மட்டும் கார்ப்ப ரேட்கள் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த தொகையில் ரூ. 11லட்சத்து 77 ஆயிரத்து 883 கோடியை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்திருக்கி றது. தள்ளுபடி பெற்றிருக்கும்  நிறுவனங்கள் நஷ்டத்தில் மூழ்கவில்லை. மாறாக  மேலும்  பல ஆயிரம் கோடி சொத்துக்களுடன் பல்வேறு பெயர்களுடன் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தள்ளுபடி செய்யப்பட்ட  தொகை முழுவதும் மக்களின் சேமிப்புப் பணம்.  ஒன்றிய  அரசின் அமலாக்கத்துறை மற்றும்  புலனாய்வு அமைப்புகளும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இதுதான் மோடி அரசு மக்கள் பணத்தைப் பாதுகாக்கும் லட்சணம்! 

அவ்வளவு ஏன், 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடியை மோசடி செய்து வெளி நாட்டிற்கு விஜய் மல்லையா தப்பி ஓடினார். ஆனால் அங்கு ரூ.330 கோடிக்குப்  புதிதாகச் சொத்து வாங்கியிருப்பதாக சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ஏன் அந்த சொத்தை பறிமுதல் செய்யவில்லை ?ஆனால் சாதாரண மக்கள் வங்கியில் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.  ஆனால் கார்ப்ப ரேட்கள் என்றால் மோசடித் தொகை  தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுதான் ஒன்றிய அரசு சாதாரண மக்கள் மீது காட்டும் அக்கறை.

2018 முதல் 2023 வரை ரூ. 12,979 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரம் கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பகுதி நன்கொடையை பாஜக பெற்று முதலிடத்தில் இருக்கிறது.  ரிசர்வ் வங்கியின் தகவல்படி மொத்த வராக்கடனில் 76 சத விகிதத்திற்கும் அதிகமான தொகையை 312 பெரிய கார்ப்பரேட்கள் மட்டும் வைத்துள்ளனர். இவர்கள்தான் அதிகளவில் பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை  அளித்தி ருக்கின்றனர்.  அதற்கு கைமாறாக இந்த நிறு வனங்களின் வங்கிக்கடனில் பெரும் பகுதியை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. 

தற்போது இதுவும் போதாது என்று, மோசடி செய்த நிறுவனங்களுடன் சமரசம் செய்து, இருக்கும் கடனையும் தள்ளுபடி செய்யலாம். ஒரு வருடம் கடந்த நிலையில் மீண்டும் அதே மோசடி நிறுவனங்களுக்கு கடனும் வழங்கலாம் என விதியை மோடி அரசு ரிசர்வ் வங்கி மூலம் திருத்தம் செய்திருக்கிறது. இதுதான் ஒன்றிய மோடி அரசும்,  பாஜகவும் இணைந்து  ஊழலை ஒழிக்கும் லட்சணம்! வங்கிகளையும்,  மக்களின் சேமிப்புப் பணத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் ஒன்றிய பாஜக அரசை அகற்றிட மக்கள் ஒன்றிணைய வேண்டும்.