headlines

img

துரோகத்தின் துவக்கமா?

உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்துவிட்டன. அதற்காக ஒன்றிய பாஜக அரசும்  கட்சியும் செய்த தந்திரங்கள் அவர்கள் எதிர்பார்த்த  அளவு பயனைத் தராவிட்டாலும் கூட ஓரளவு நல்ல அறுவடையையே தந்திருக்கின்றன. அத னால் பெற்ற துணிவினால் தங்களது வழக்கமான மக்கள்விரோத விவசாய விரோத, கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளில் இறங்கிவிட்டார்கள்.

அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை திங்களன்று பொதுவெளியில் வெளியிட்டிருப்பது. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதோ, நடைமுறைப்படுத்தாமல் இருப்ப தோ அந்தச் சட்டங்களை ஆதரிக்கும்  பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக் கும் என்று குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது என்று அந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனில் கன்வட் கூறியிருக்கிறார். 

அத்துடன், எதிர்காலத்தில் வேளாண்துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று கூறியிருப் பது ஒன்றிய பாஜக அரசின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஏனெனில் பிரதமர் மோடி, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, வேளாண் சட்டங்களை ரத்து  செய்வதாகக் கூறினார். அப்போதும் கூட விவசாயி களுக்கு இந்தச் சட்டங்களைப் பற்றி புரிய வைக்க முடியவில்லை என்று கூறியது அவர் முழு மனதோடு அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்பதையே உணர்த்தியது.

ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பாஜக தலைவர்கள் சிலரும் அந்தச் சடடங்கள், தேவைப் பட்டால் மீண்டும் கொண்டுவரப்படும் என்றே கூறி னார்கள். அதற்கான முன்னோட்டம்தான் இந்த அறிக்கை வெளியீடு என்றே எண்ணத் தோன்று கிறது. ஏனெனில் இந்த அறிக்கை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது கடந்த ஆண்டு மார்ச் 19 ஆகும். அதை வெளியிடுவதெனில் அப்போதே  ஒன்றிய பாஜக அரசு செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் ஐந்து மாநிலத் தேர்தல் களில் பாஜக படுதோல்வியடைந்திருக்கும் என்ப தாலேயே இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்குசட்ட அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றுகுழு கூறி யிருந்தது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவருவது பற்றி பாஜக தலைவர்களும் பிரதமர் மோடியும் மவுனமே காத்தனர். இப்போது தான் மவுனம் கலைகிறது, அனில் கன்வட் மூலமாக. உண்மையில் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துரோகம் இழைக்க நினைத்தால் அவர்கள் மீண்டும் களத்தில் இறங்குவார்கள். ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

விவசாயிகளின் நலனுக்காக ஏதாவது செய்வதென்றால் ரத்து செய்யப்பட்ட அந்த மூன்று சட்டங்களை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது. அத்துடன் மின்சாரத்திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப்பெறவேண்டும். அது மட்டுமின்றி குறைந்தபட்ச ஆதரவு விலை  சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில் ஏர்க்கலப்பைக்காரர்கள் மீண்டும் போர்க்களத்தில் சங்கமிப்பார்கள்! தங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை ஒன்றிய பாஜக  அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் புரியவைப்பார்கள்.