headlines

img

பெண்ணின் உடலை பலிகடா ஆக்காதீர்!

‘‘பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான்” என்று  உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்புரையில் கூறியுள்ளது. 

பாலியல் வணிகம் என்பது ஒரு மிகப்பெரிய வலைப்பின்னல். சட்ட விரோத கடத்தல் தொழிலில் பாலியல் வணிகத்திற்காக கடத்துவது என்பது பெரிய லாபம் குவிக்கும் நடவடிக்கை. இந்த வலையை வீசுபவர்கள் பல்வேறு பிரமுகர்கள், பாலியல் வணிக விடுதி நடத்துபவர்கள், இதில்  செயல்படும் தரகர்கள்- இவர்களே குற்றவாளிகள். காவல்துறை பெரும்பாலும் இவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதில்லை.. அடி மூட்டையாக அனு தினமும் உடலையும் மனதையும் நோகக் கொடுக்கும்  பெண்கள் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படுவதை  எவராலும் ஏற்க முடியாது. 

Prostitution per se is not a criminal offence  (பொருளீட்டுவதற்காக உடலை விலைபேசுவது ஒரு கிரிமினல் குற்றமல்ல) என என்றைக்கோ நீதி மன்றங்கள் சொல்லி விட்டன. அனைவருக்கும்  மனித உரிமை உண்டு. கண்ணியமாக நடத்தப்படு வதற்கான தகுதி உண்டு. அமைப்பு வைத்து  தங்களது உடல் நலன், மன நலன், கண்ணியமாக நடத்தப்படுவது, காவல்துறையின் அராஜகம், குழந்தைகளின் கல்வி என்பன போன்ற பல்வேறு  விஷயங்களை எடுக்கலாம். அரசின் தலையீடும் இதில் தேவை. நீதிமன்றத்தின் விரிவான வழி காட்டுதல் இதில் வரவேற்கத்தகுந்ததே.

அதே சமயம் எந்தப் பெண்ணும் விரும்பி இதில் ஈடுபடுவதில்லை, வறுமை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த வணிகத்தில் தள்ளப்படு கிறார்கள். தரமான கல்வி, கண்ணியமான வேலை,  வருமானம் போன்றவை உத்தரவாதப்படுத்தப் படுகிற சமூகத்தில் இந்த பிரச்சனை வராது. எனவே பிரச்சனையின் ஊற்றுக்கண் என்பது வாழ்க்கைக்கான உத்தரவாதத்தைத் தர வக்கற்ற முதலாளித்துவ சமூக அமைப்பே! 

இந்தியாவில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக 2010க்கும் 2020க்கும் இடையிலான பத்தாண்டு காலத்தில் வேலை வாய்ப்பு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக வீழ்ந்தது. இதை விட அதிகமாக கோவிட் ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் பத்து கோடிக்கும் அதிகமான பெண்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது. தற்போது நாட்டில் பெண்களுக்கும், ஆண் களுக்கும் இடையிலான வேலை வாய்ப்பு இடைவெளி 58 சதவீதமாக இருக்கிறது. வேலை யின்மை, ஆணாதிக்க குரூரங்கள், பெண்கள் மீதான சமூக கொடுமைகள் உள்ளிட்ட பல காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன.

இதில் தள்ளப்படும் பெண்களை மீட்டெடுத்து முறையான  வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை போன்ற வற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்னெழும் இக்காலத்தில், இதனைத் ‘தொழில்’ என அங்கீகரிப்பது, பெண்ணின் உடலை பலிகடாவாக்கி, லாபமீட்டும் முதலைகளைப் பாதுகாப்பதற்கே சமம்.

‘‘நோய் நாடி நோய் முதல் நாடி அதன் வாய் நாடி வாய்ப்பச் செயல்’’ என்பதையே நீதித்துறைக் கும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.