headlines

img

தில்லி வன்முறை: புதிய இந்தியாவின் எதார்த்தங்கள் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்றுள்ள நிகழ்வுகள், தில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றபோது எழுந்த பல கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்திருக்கின்றன. இதுவரையிலும்  கொல்லப்பட்டவர்களில் 53 பேர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயங்கள் அடைந்திருக்கிறார்கள். வீடுகள், கடைகள், ஏன் பள்ளிக்கூடங்கள் கூட மிகப்பெரிய அளவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

வன்முறை நடைபெற்ற பின்னர் அங்கே உள்ள நிலைமையைக் கையாளும் விதமும் கூட, தில்லியில் நடைபெற்ற சம்பவங்கள், உறுதியுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்களை, ஓர் இந்து-முஸ்லீம் மோதலாக சீர்குலைத்திடவும், திசைதிருப்பிடவும்  மத வெறி அடிப்படையில் வன்முறையைத் தூண்டுவதற்காகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

கலவரங்கள் நடைபெற்ற சமயங்களில் தில்லிக் காவல்துறை நடந்துகொண்ட விதமும், முஸ்லீம்களைக் குறி வைத்து இந்து குண்டர் கும்பல் தாக்குதல்களைத் தொடுத்தபோது போலீஸ்காரர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததும், அல்லது, தாக்குதல்கள் நடைபெற்ற சமயத்தில் கண்டும் காணாதது போன்று நின்று கொண்டிருந்ததும், கலவரங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கொலைகள், தீக்கிரை சம்பவங்கள் மற்றும் கொடுங்காயங்களுக்கு உட்பட்டவர்கள் முறையீடு தாக்கல் செய்திட காவல்நிலையத்திற்கு வரும்போது அவர்களைக் கையாளும் விதத்தில், இப்போதும் தொடர்கின்றன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு சிறிய இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் மார்ச் 2 அன்று கூடியது. ஆனாலும் அரசாங்கம் இந்த வன்முறை வெறியாட்டங்கள் குறித்தும், தில்லியில் உள்ள நிலைமை குறித்தும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்திற்கு அனுமதி அளித்திட மறுத்து விட்டது.  ஒரு வார காலமாக, தலைநகரில் இருந்து வந்த கடுமையான நிலைமை குறித்தும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விவாதித்திட மறுத்துவிட்டது. அரசாங்கத்தின் தரப்பில் ஹோலி பண்டிகைக்குப் பின்னர்தான் விவாதம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், மோடி அரசாங்கத்தால் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள செய்தி என்பது தெளிவானதாகும். அதாவது, ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்ததற்காக உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டுவிட்டது. உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக நீங்கள் எவ்விதமான நீதியையும் பெற மாட்டீர்கள்’ என்பதுதான் அந்த செய்தியாகும்.

கடைசியாக, மக்களவை இந்த விஷயத்தை விவாதத்திற்காக மார்ச் 11 அன்று எடுத்துக் கொண்டபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வன்முறைக்குப் பின்னால் சதி வேலையும், முன்கூட்டியே திட்டமிடலும் இருந்ததாகவும் கூறிவிட்டு, மேலும் இதன் பின்னால் எதிர்க்கட்சியினரும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களும் இருந்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அரசாங்கம், தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் தனக்குள்ள குற்றப்பங்கினை எவ்விதத்திலும் வெளிப் படுத்தப்படுவதைத் தவிர்க்க விரும்பியது. தில்லியின் காவல்துறை மிகவும் வெட்கக்கேடான ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஏனெனில், இது உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. உள்துறை அமைச்சர், அமித் ஷா,  வன்முறையை உறுதியான முறையில் அடக்கிட எவ்விதமான கட்டளையையும் பிறப்பித்திடவில்லை.  திரும்பிப் பார்ப்போமானால், பிப்ரவரி 24க்குப் பின்னர் இந்து குண்டர் கும்பல்களுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவும் அவர்களுடைய சொத்துக்களுக்கு எதிராகவும் வெறித்தனமான முறையில் நாச வேலைகளில் ஈடுபட உரிமம் வழங்கப்பட்டது தெளிவாகவே தெரிகிறது. இதற்கு முன் சில பகுதிகளில் முஸ்லீம்களால் சில பழிவாங்கும் தாக்குதல்கள் இருந்திருக்கின்றன.

 ஆனால், பின்னர் நடந்தது என்னவென்றால், முஸ்லீம்களுக்கு எதிராக ஓர் இனப் படுகொலையே கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதும் இதற்குப் போலீசாரும் உடந்தையாக இருந்தார்கள் என்பதுமாகும். போலீசார் வன்முறையில் ஈடுபட்ட குண்டர் கும்பல்களுக்கு உதவி செய்வது குறித்தும், உடந்தையாக இருந்தது குறித்தும் எண்ணற்ற வீடியோக்கள் வெளிவந்துள்ள போதிலும், ஒரு போலீஸ்காரர் கூட இதற்காகப் பொறுப்பாக்கப்பட வில்லை. ஒரு வீடியோ பார்ப்பவர்களையெல்லாம் மிகவும் நடுங்கவைக்கும் விதத்தில் வெளியாகி இருக்கிறது. அதில், போலீஸ்காரர்கள் காயம் அடைந்த ஐந்து முஸ்லீம் இளைஞர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதையும், அவர்களைத் தேசிய கீதம் பாடச் சொல்லி வற்புறுத்தினார்கள் என்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது. இந்த இளைஞர்களில் ஒருவர், ஃபைசான் என்பவர், போலீசாரின் கஸ்டடியிலிருந்து தேசிய கீதம் பாடிய பின்புதான் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்தபின்னர் அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்களால் இறந்துவிடுகிறார். எனினும், அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டது குறித்து எவ்விதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவர், போலீஸ் கஸ்டடியிலேயே இல்லை என்று போலீசார் மறுத்திருக்கிறார்கள்.  

இவ்வாறான சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்காக ஒரு போலீஸ்காரர் மீது கூட குற்றச்சாட்டு ஏற்படுத்தப்படாத நிலையில், வன்முறைக்கு ஆளானவர்கள், வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து புலன்விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரு சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் (SITs-Special Investigation Teams) மீது  நம்பிக்கையற்று இருக்கிறார்கள்.

வட கிழக்கு தில்லியில் வன்முறை வெடிப்பதற்கு முன்பு, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சமயத்தில் பாஜக தலைவர்கள் நஞ்சு கலந்த வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்கள். ஷாஹீன்பாக்கிலும் தில்லியின் மற்ற மையங்களிலும் நடைபெற்றுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் தீயைக் கக்கிவந்தார்கள்.

தேர்தலில் ஆதாயம் ஈட்டுவதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ்-பாஜக இந்துத்துவா சக்திகள் மத வெறி மோதல்களைத் தூண்டிவிடுவதற்காக, குண்டர் கும்பல்களைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். கேந்திரமான இடங்களில்  ஏராளமான அளவில் கற்களும், செங்கற்களும் முன்னதாகவே கொண்டுவந்து குவிக்கப் பட்டிருந்ததிலிருந்தும், சமூக விரோதக் குண்டர் படைகள் துப்பாக்கிகள் ஏந்தியவண்ணம் கேந்திரமான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததிலிருந்தும், இது ஒரு முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது.  இந்தக் குண்டர் கும்பல்கள் வெளியே இருந்து கொண்டுவரப் பட்டவைகளாகும். தில்லி சட்டமன்றத்திற்கு பாஜக சார்பில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் உள்ள எட்டு சட்டமன்ற உறுப்பினர்களில், ஐந்து பேர் வன்முறை நடைபெற்ற இடங்களான வட கிழக்கு தில்லியில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பது தற்செயலான ஒன்று அல்ல.

இவ்வாறு இவர்களால் உருவாக்கப்பட்ட வன்முறை வெறியாட்டங்களை, வன்முறை நடைபெற்று முடிந்தபின்னர், மூடி மறைத்திடவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தில்லிக் காவல்துறை, வெறுப்புப் பேச்சை உமிழ்ந்த மற்றும் தீயைக் கக்கிய கோஷங்களை எழுப்பிய பாஜக தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உறுதியுடன் மறுத்து வருகிறது. கடைசியாகப் பேசிய கபில் மிஷ்ரா, கிளர்ச்சியாளர்கள் தங்கள் இடத்தைக் காலி செய்துவிட வேண்டும் என்று காவல் துணை ஆணையர் முன்னாலேயே  அச்சுறுத்தலை மேற்கொண்டார். தில்லிக் காவல்துறை, நீதிமன்றத்திலேயே, ‘துரோகிகளைச் சுடுங்கள்’ என்று கூறியது எந்த சமூகத்தினருக்கும் எதிராகக் குறிவைத்துக் கூறப்பட்டதல்ல என்றும், எனவே, இது வெறுப்புப் பேச்சு இல்லை என்றும் கூறியிருக்கிறது.

மக்களவையில் அமித் ஷா, காவல்துறையினர் 700க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்திருப்பதாகவும், இதுவரை 2,647 பேரைக் கைது செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41-சி பிரிவின்படி, கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் காவல் நிலையத்திற்கு வெளியே தொங்கவிடப்பட வேண்டும்  மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பட்டியல் மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது செய்யப்படவில்லை. கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அதிகமான அளவில் முஸ்லீம்கள்தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகத்தான் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிக்கைகள் காட்டுகின்றன.

வன்முறையை அடுத்து நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகளும்கூட எந்த அளவிற்கு உயர்மட்ட அளவிலான நீதித்துறையும்கூட கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது அல்லது நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. கலவரங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவி புரிந்திட வேண்டும் என்பதற்காக தில்லி உயர்நீதிமன்றத்தில் தீர்மானகரமான முறையில் நடவடிக்கை எடுத்த நீதியரசர் எஸ். முரளிதர் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். அவர் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ‘வெறுப்புப் பேச்சுக்கள்’ பிரச்சனையும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும், குடிமக்களின் வாழ்வையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் விதத்தில் தீர்மானகரமான முறையில் தலையிடுவதற்குப் பதிலாக அரசு எந்திரத்தின் கோரிக்கைகளுக்கு மீண்டும் ஒருமுறை இணங்கியிருக்கிறது.

காவல்துறையும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனையும் தில்லி ஏஏபி அரசாங்கத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் வராததால், அது வன்முறையைச் சமாளிக்காது கடமையிலிருந்து வழுவியதாகக் குற்றஞ்சாட்டுவது சரியல்ல. எனினும், வெறுப்பை உமிழ்ந்த மதவெறியர்களுக்கு எதிராக வலுவான முறையில் வெளிவந்து தன்னுடைய அரசியல் தலைமையை அளிக்காது ஒதுங்கிக் கொண்டதில் அரவிந்த் கேஜரிவாலின் தோல்வி அடங்கியிருக்கிறது.

தில்லி வன்முறையானது, மதவெறியில் ஊறிப் போயிருக்கிற காவல்துறை, சமரசத்திற்கு உள்ளாகியுள்ள அரசு நிறுவனங்கள், அரசு எந்திரத்தின் அப்பட்டமான முஸ்லீம் எதிர்ப்பு நிலைப்பாடு என்னும் புதிய இந்தியாவின் எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இப்போதுள்ள நிலையில், பிரதானமான நடவடிக்கை என்பது மத வன்முறை வெறியாட்டங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். நீதித்துறை விசாரணை என்பது இதனைச் செய்வது சாத்தியமில்லை. ஏனெனில் இது மிகவும் கால தாமதத்தை ஏற்படுத்திடும்.  மேலும் இதற்கு தண்டனை அளிக்கும் அதிகாரங்களும் கிடையாது. எனவே, வெளிப்படைத் தன்மையுடன் நீதித்துறையின் தலைமையில் மேற்கொள்ளப்படும் புலன் விசாரணை மட்டுமே, நாட்டின் நீதிபரிபாலன அமைப்பின் மீது கொஞ்சம் நம்பகத் தன்மையை  மீளவும் ஏற்படுத்திட முடியும்.

(மார்ச் 11, 2020)

(தமிழில்: ச. வீரமணி)

;