headlines

img

இதிலுமா போலி?

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிங்ஸ்லி தனியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்சிசி) பெயரில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு நடந்துள்ள கொடுமை இனி எந்தப் பள்ளியிலும் நடைபெறக்கூடாது.
 

தேசிய மாணவர் படை என்பது உடல் திறனையும் ஒழுக்கத்தையும் நாட்டுப்பற்றை யும் அர்ப்பணிப்பு உணர்வையும் இளைய தலைமுறைக்கு கற்பிப்பதற்கே  அமைக்கப் பட்டது. அதில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் முதன்மையானது. ஆனால் அதன் பெயரிலேயே போலியான முகாம்கள் நடத்தப்படுவது எப்படிச் சாத்தியமாகிறது? இதை கண்காணிப்பதற்கும்  ஒழுங்குபடுத்துவதற்கும் தகுந்த ஏற்பாடு ஏதும் இல்லையா? தனியார் பள்ளிகள் ‘தனி ராஜ்யம்’ நடத்துகின்றனவா? அப்படியெனில் அவை பள்ளிக் கல்வித்துறையின் வரம்புக்குள், கட்டுப்பாட்டுக்குள் வராதா?

மெட்ரிக் பள்ளிகள் தவிர்த்து அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தானே இயங்குகின்றன. அப்படியிருக்கும் போது என்சிசி முகாம்கள் மட்டுமல்ல, இதர முகாம்கள் நடத்துவதற்கும் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஆனால் கிங்ஸ்லி பள்ளி அத்தகைய  அனுமதியைப் பெற்றதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

என்சிசியின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்  அந்தமான் நிகோபர் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அந்த முகாம் போலியானது, அதை நடத்தியவர்களும் போலியானவர்கள். அந்தப் பள்ளி சார்பில் என்சிசி முகாமுக்காக எந்தப் பதிவும் செய்யப்பட வில்லை என்று கூறியுள்ளது. அப்படியெனில் கிங்ஸ்லி பள்ளி போல எத்தனை பள்ளிகளில் இத்தகைய போலிகள் செயல்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விதி மீறி நடத்தப்பட்ட முகாமில் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அறிக்கை பெறட்டும்; கடும் நடவடிக்கை எடுக்கட்டும். அது அவசியமானதே.

ஆனால் தேசியம் பேசிக் கொண்டு, என்சிசியின் பெயரால் இழுக்கை ஏற்படுத்திய இந்தக் கொடும் நிகழ்வு தொடர்புடைய அனை வரும் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டது பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வித்துறை தனது க ண்காணிப்பு நடவ டிக்கைகளை கடுமையாக்க வேண்டும். தடிகள் ஏந்தும் ஆர்எஸ்எஸ் வன்முறை அணிவகுப்பு கள் கூட பல தனியார் பள்ளிகளில் நடைபெறு கின்றன. அவற்றை தடுத்திடும் வகையில் கல்வித்துறையின் செயல்பாடுகள் அமைந்திட  வேண்டும்.