மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு, டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலை மேற் கொண்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். அதன்படி, ஜூன் 12-ஆம் தேதி தமிழக முதல்வர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது, நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடி க்கு 10 ஆயிரம் கன அடி நீர்வெளியேற்றப்பட்டது.
எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததாலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் மறுத்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் நீர்வளத்துறை அக்டோபர் 11 முதல் தண்ணீர் திறப்பதை நிறுத்திக் கொண்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக் கிழமை (நவ.5) காலை எட்டு மணி நிலவரப்படி 53.32 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,227 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,845 கன அடியாகக் குறைந்துள் ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 503 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.96 டிஎம்சியாக உள்ளது.
இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை (ஜூன்-செப்டம்பர்) மூலம் 2022-ஆம் ஆண்டின் இதே காலத்தில் பெற்றதில் வெறும் 10 சதவீதம் மட்டுமே தமிழகம் பெற்றுள்ளது. அதாவது, தென் மேற்குப் பருவ மழை மூலம் 45 டிஎம்சி தண்ணீரே கிடைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின் தொடக்க மாதமான அக்டோபரில் 121 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது.
ஆனால் 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் சுமார் 12.85 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. இந்த மாத இறுதியில் அதிகபட்சம் 48 டிஎம்சி கிடைத்துள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வரும் மாதங்களில் கன மழை பெய்ய வாய்ப்பில்லை. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளின் கீழ் பகுதி. மேட்டூர் அணைப் பகுதி களில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே நிலைமை மாறும்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வரத்து இல்லை என்று ஆகியுள்ள நிலையில், இந்தாண்டு சம்பா மகசூலும் கணிசமாக பாதிக் கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வோராண் டும் நீருக்காக காத்திருப்பதும், போராடுவதும், பயிர்கள் காய்ந்து துயரப்படுவதும், தவறிப் பெய்யும் அதீத மழையால் இருக்கும் பயிரையும் இழந்து வேதனையில் மூழ்குவதுமே காவிரி டெல்டா விவசாயிகளின் கதையாக மாறிடுமோ?