headlines

img

பொது சிவில் சட்டத்தை நாடு நிச்சயம் நிராகரிக்கும்

பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம் அவசியம்’ என்று கூறியிருக்கிறார். பாஜகவின் திட்டத்தில்  காஷ்மீ ருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரி வை நீக்குதல், அயோத்தியில் ராமருக்கு கோவில் எழுப்புதல், பொது சிவில் சட்டத்தை இயற்று தல் என மூன்று நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன.அதில் முதல் இரண்டு ஏற்கனவே அமலாகிவிட்டது. பொது சிவில் சட்டம் என்று முன்பு சொன்ன பிரத மர் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெறுவ தால் ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ என்று வார்த்தையை மாற்றியுள்ளார். பெயரில் மதச் சார்பற்ற என்ற வார்த்தை இருந்தாலும் இவர்க ளின் பொதுசிவில் சட்ட ஆலோசனைகள் ஆபத்தானவை.

ஒன்றிய அரசை ஆதரிக்கக்கூடிய ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் கட்சிகள் பொது சிவில் சட்டத்தை  ஆதரிக்கவில்லை.  பொது சிவில் சட்டத்தை உத்தரகண்ட் மாநிலத்தில் அம் மாநில பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதில் மலைவாழ் பழங்குடியினர் சேர்க்கப்பட வில்லை. மற்ற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டிருக்கிறது. 

அரசியல் சாசனத்தை இயற்றும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொது சிவில் நடைமுறையை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அரசி யல் நிர்ணய சபையில் விரிவாக விவாதிக்கப் பட்டு, அதனை சட்டமாக்கும் முடிவு நிராக ரிக்கப்பட்டது. மிகப் பெரிய அளவில் பரந்து விரிந்த ஒரு நாட்டில், பல்வேறு கலாச்சார, மதப் பிரிவினர் வாழும் ஒரு தேசத்தில் எல்லோ ருக்கும் பொதுவானதாக ஒரு சிவில் சட்டம் கொண்டு வரப்படுவது நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது.

பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட 21-ஆவது சட்ட ஆணையமே கூட,  தனிநபர் சட்டங்க ளில் சீர்திருத்தங்கள் குறித்து 2018 ஆகஸ்ட் 31 ஆம்தேதி வெளியிட்ட அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பல் வகையான வேறுபட்ட கலாச்சாரங்களை மதித்து கொண்டாட வேண்டுமே தவிர, பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் அதனுடைய தனித்தன்மை களை சிதைக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியது. ஆனால், அதை நிறைவேற்றுகிற வகையில் பாஜகவுக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மையை கொடுக்க வில்லை. இதன் பின்னரும் பாஜக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மக்களை மதரீதியாக பிளவு படுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்த பாஜக எடுக்கும் முயற்சியை நிச்சயம் நாட்டு மக்கள் முறியடிப்பார்கள்.