headlines

img

பொய்களின் ஊர்வலம்!

பஞ்சாப் மற்றும் உ.பி., மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல வாய்ஜாலம் காட்டியுள்ளார். ஏழைகளின் நலனே எல்லா வற்றையும் விட மேலானது என்று கூறிய துறவி ரவிதாஸின் கொள்கைகளை தம்முடைய அரசு பின்பற்றுவதாக அவர் கூறியுள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கெதிராகவும், கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிற அரசுக்கு தலைமை தாங்கும் பிரதமருக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழை, எளிய மக்களின் மீது பாசம் பொங்குகிறது. இவருடைய ஆட்சியில் வறுமை, வேலையின்மை, அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. ஏழைகள் மேலும் ஏழைகளாகுகிறார்கள். குறிப்பிட்ட சில கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது.

அம்பானி, அதானி உள்ளிட்ட சில முதலாளிக ளுக்கு கரசேவை செய்வதில்தான் பிரதமர் மோடி யின் அரசு முனைப்பாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் முதலாளிகளுக்கே சலுகை மழை பெய்தது. புலம் பெயர் தொழி லாளர்கள் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து அல்லல்பட்டார்கள். இதையெல்லாம் தன்னுடைய பேச்சின் மூலம் மறைத்து விட முடியும் என்று பிரதமர் நம்புகிறார் போலும்.

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் திருத்தச் சட்டங்களை கொண்டு வந்தது மோடி அரசு. இதை எதிர்த்து ஓராண்டு காலத்திற்கும் மேலாக பஞ்சாப், அரியானா, உ.பி,. உள்ளிட்ட மாநி லங்களைச் சேர்ந்த விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினர். தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் போராட் டத்திற்கு ஆதரவாக பேரலை எழுந்தது.

போராடிய விவசாயிகள் மீது தேச விரோத முத்திரை குத்தி அடக்குமுறையை ஏவிவிட்டது ஒன்றிய அரசு. ஆனால் விவசாயிகளின் ஒன்று பட்ட போராட்டம் வெற்றி பெற்றது. ஆனால் பஞ்சாபில் பேசிய பிரதமர் மோடி இந்த மாநிலத்தில் விவசாயம், தொழில் வர்த்தகம் ஆகிய துறைகளை லாபகரமாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார். விவ சாயத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்ப ரேட் கையில் ஒப்படைத்து அவர்களுக்கு லாபமாக மாற்ற முயன்றவர் இப்போது மாற்றிப் பேசுகிறார்.

உ.பி.யில் பேசிய பிரதமர் பாஜக ஆட்சியில் குண்டர் ராஜ்ஜியத்தை ஒழித்துவிட்டதாக கூறி யுள்ளார். ஆட்சியாளர்களே குண்டர்களாக மாறிய விபரீதம் உ.பி.யில் நிகழ்ந்தது பாஜக ஆட்சி யில்தான். பசு குண்டர்கள் என்ற புதுவகையான வன்முறையாளர்கள் உருவாக்கப்பட்டு படு கொலைகள் நடந்தன. பெண்கள், குழந்தைகள் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்தவர்களை மதப்போர்வைக்குள் போர்த்தி பாதுகாத்தது யோகி ஆதித்ய நாத் அரசு.

தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கெதிராக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே வன் முறையை ஏவியதோடு அதை நியாயப்படுத்தவும் செய்தார்கள். இதையெல்லாம்  உணர்ந்த உ.பி.மக்கள் பாஜகவை துடைத்தெறிய முடிவு செய்துவிட்டனர். பிரதமரின் கடைசிக் கட்ட முயற்சி கள் அந்தக் கட்சியை காப்பாற்றப்போவதில்லை.