உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 94 வயதான பகவானி தேவி தாகர் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் விளையாடிய அரியானாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி, 1 தங்கம் மற்றும் 2 வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பின்லாந்தின் தம்பேரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் பகவானி 24.74 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும் குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் 3 தங்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து 94 வயதான பகவானி தேவி தாகர் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வேறொரு நாட்டில் பதக்கங்களை வென்று என் நாட்டை பெருமைப்படுத்தியிருக்கிறேன்" என்றார்.