உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முரளி ஸ்ரீசங்கர்.
உலக தடகள போட்டி அமெரிக்காவின் ஒரிகான் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 15 தொடங்கி ஜூலை 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா சார்பில் 22 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா தலைமையில் சென்றுள்ள இந்த அணி பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குண்டு எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தஞ்சிந்தர்பால் சிங் போட்டியில் பங்கேற்காமல் வெளியேறினார்.
தொடர்ந்து, 20 கிலோமீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியங்கா கோஸ்வாமி 34 இடத்திலும் சந்தீப் குமார் 40வது இடத்தை பிடித்து வெளியேறினார்.
இதையடுத்து, நீளம் தாண்டுதல் பிரிவில் உலகின் நம்பர் 12 வீரராக இருக்கக்கூடிய முரளி ஸ்ரீ சங்கர் அதிகபட்சமாக 8மீ தாண்டி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அதேபோல 3000மீ ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சப்ளே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.