சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்.
கிரீஸ் நாட்டில் உள்ள கலிதியா நகரில் 12ஆவது சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக முரளி ஸ்ரீசங்கர் கலந்து கொண்டார்.
போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் அதிகபட்சமாக 8.31 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். இவருக்கு அடுத்து 2 ஆவது இடத்தில் ஸ்வீடன் நாட்டின் தோபியாஸ் மாண்ட்லர் 8.27 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். 3 ஆவது இடத்தில் 8.17 மீட்டர் தாண்டிய பிரான்ஸ் நாட்டின் ஜூல்ஸ் பொம்மெரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
கேரளாவை சேர்ந்த 23 வயதான முரளி ஸ்ரீசங்கர், 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்தியக் குழுவில் தேர்வானார்.
இதற்கிடையில், போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அவசர அறுவை சிகிச்சை ஒன்றை செய்துள்ளார். இதனால் அவருக்கு எடை இழப்பு மற்றும் சரியாக நடக்க இயலாமை ஏற்பட்டது.
பின்னர் விரைவாக மீண்டெழுந்த முரளி தற்போது சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இவர் கடந்த மாதம் 8.36 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.