கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. வியாழனன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 4-ஆம் நிலை வீரரும், அதிரடிக்கு பெயர் பெற்ற நார்வே நாட்டவருமான காஸ்பர் ரூத், தரவரிசையில் இல்லாத புதுமுக வீரரான சீனாவின் ஜங் ஜிஜெனினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் முன்னணி வீரரான காஸ்பர் ரூத் எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜங் ஜிஜென் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்து ரூத்தை மிரட்டினார். ஜங் ஜிஜெனின் பெரும்பாலான சர்வீஸ் 120 கிமீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் அனல் பறந்தது. இதனால் திக்குத் திணறிய காஸ்பர் ரூத் 4-6, 7-5, 2-6, 6-0, 2-6 என்ற செட் கணக்கில் போராடி ஜங் ஜிஜெனிடம் வீழ்ந்து வெளியேறினார். ஜங் ஜிஜென் சர்வீஸ் மட்டுமல்லாது, ரிவல்ஸ் ஷாட், பேக் ஹேண்ட் ஷாட் ஆகியவற்றில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூத்தைப் போல ஆஸ்திரியாவின் தியம், ஹங்கேரியாவின் மார்டன் ஆகியோரும் தரவரிசை இல்லாத வீரர்களிடம் தோல்வியை சந்தித்து வெளியேறினர். அமெரிக்க வீரர்கள் பிரிட்ஜ், தியாபோ, பவுல், ஸ்பெயினின் டேவிட்டோவிச், பிரான்சின் அட்ரியன் ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஒரே நாளில் 4 நட்சத்திரங்கள் அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்களில் ஒரே நாளில் (வியாழனன்று) 4 நட்சத்திர வீராங்கனைகள் வெளியேறியுள்ளனர். செக்குடியரசின் கிவிடோவா, போலந்தின் லினிட்டே, பெலாரசின் அஸரென்கா, ரஷ்யாவின் கலின்ஸ்கயா ஆகியோர் தரவரிசையில் இல்லாத வீராங்கனைகளிடம் வீழ்ந்து வெளியேறினர். ஆடவர் ஒற்றையர் பிரிவை விட மகளிர் ஒற்றையர் பிரிவில் மிக மோசமான அளவில் அதிர்ச்சி தோல்விகள் அதிகரித்து வரும் நிலையில், டென்மார்க்கின் வொஜ்னியாக்கி, ரஷ்யாவின் ஜலீனா, கஜகஸ்தானின் ரைபகினா, ருமேனியின் கிரிஸ்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.