games

img

மிகவும் துணிச்சலுடனும், உறுதியுடனும் அணியை வழிநடத்திச் சென்றவர் கோலி - ரோகித் ஷர்மா

மிகவும் துணிச்சலுடனும், உறுதியுடனும் அணியை வழிநடத்திச் சென்றவர் கோலி என சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணியை விராட் கோலி கேப்டனாக முன்னின்று வழிநடத்திய இந்த ஐந்து ஆண்டுகளை ஒருபோதும் மறக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அணியை வெற்றிப் பெற செய்ய வேண்டுமென்ற உறுதியும், அதற்கான அர்ப்பணிப்பையும் அவர் களத்தில் வெளிப்படுத்தி உள்ளார். அவரது தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் அற்புதமானது.  நானும் அவரும் ஒன்றாக இணைந்து நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளோம். அவருடனான அந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். அதை தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தார். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் ஷர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து, இந்திய அணியின் முழுநேர ஷார்டர் பார்மெட் கேப்டனாக செயல்பட உள்ளார்.  இந்நிலையில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் முதல் முறையாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, இந்திய அணிக்காக விளையாடும் போது அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அந்த அழுத்தம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். மக்கள் எப்போதும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசிக் கொண்டு இருப்பார்கள். ஒரு கிரிக்கெட் வீரனாக இதை சொல்கிறேன். இப்போது நான் என் வேலையில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம். அதைவிடுத்து மக்கள் பேசுவது குறித்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் பேசுவதை நம்மால் நிறுத்த முடியாது. இதை நான் பல லட்சம் முறை சொல்லி உள்ளேன். தொடர்ந்து சொல்வேன் என தெரிவித்துள்ளார். 

;