இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், எங்கள் முன்னாள் அல்லது தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நடுவர்கள் அளித்த பங்களிப்பை பிசிசிஐ மதிக்கிறது.
அந்தவகையில், அவர்களின் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது அதன் ஒரு படியாகும். அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் (ஆண்கள், பெண்கள்) மற்றும் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இதில் மொத்தம் சுமார் 900 பணியாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
சுமார் 75 சதவீத பணியாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் 100 சதவீதம் உயர்த்தப்படுவார்கள் எனவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
விபரங்கள்:
முன்னாள் முதல்தர வீரர்களுக்கு முன்பு ரூ. 15,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 30,000 வழங்கப்படும்.
முன்னாள் டெஸ்ட் வீரர்களுக்கு ரூ. 37,500 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 60,000 வழங்கப்படும்.
முன்பு ரூ. 50,000 ஓய்வூதியம் பெற்றவர்கள் இனிமேல் ரூ. 70,000 பெறுவார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீராங்கனைகள் ரூ. 30,000 பெறப்பட்டு வந்த நிலையில் இனிமேல் ரூ. 52,500 பெறுவார்கள்.
2003க்கு முன்பு முதல்தர கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றவர்கள் ரூ. 22,500 பெற்று வந்த நிலையில் இனிமேல் ரூ. 45,000 பெறுவார்கள்.