டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் 2-ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சற்று நிதானமாக விளையாடினார்கள். முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. 28 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் வந்தவுடன் சுறுசுறுப்பாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார்.ஆனால் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 14 ரன்களில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். அடில் ரஷில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியைக் கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களை வீசி 20 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பாண்டிய விராட்கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார்.மேலும் இருவரும் மிக கவனமாக விளையாடினார்கள். 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த கோலி, ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
கோலி-பாண்டியா கூட்டணி 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தது. 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வந்த பாண்டியா, 18-ஆவது ஓவர் முதல் அதிரடியாக விளையாடினார். சாம் கரண் வீசிய 19-ஆவது ஓவரில் இந்திய அணிக்கு ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் கிடைத்தன. 29 பந்துகளில் பாண்டியா அரை சதமெடுத்தார். ரிஷப் பந்த் கடைசி ஓவரில் அணிக்காகத் தனது விக்கெட்டைத் தியாகம் செய்து 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். 33 பந்துகளில் 5 சிக்ஸர்கள் , 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த பாண்டியா கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்தார். பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
இரு அணிகளுக்குமான வித்தியாசத்தை இங்கிலாந்து இன்னிங்ஸின் பவர்பிளே ஓவர்களில் உணர முடிந்தது. இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தது. இந்தியா பவர்பிளேயில் எடுத்த ரன்களை 3.2 ஓவர்களில் அடைந்தது இங்கிலாந்து அணி. முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்தது.இறுதியில் 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. இறுதிவரை அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஞாயிறன்று நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.