games

img

விளையாட்டு...

லாரஸ் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

உலகின் முக்கிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான லாரஸ் விருது, ஸ்பெயின் நாட்டின் லாரஸ் விளையாட்டு அகாடமி ஆண்டுதோறும் வழங்குகிறது.  இந்நிலையில் நடப்பாண்டிற்கான லாரஸ் விருதின் சிறந்த வீரராக கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு உலகக்கோப்பை பெற்றுத் தந்தவருமான லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மெஸ்ஸிக்கு இது 2-வது  லாரஸ் விருது ஆகும். ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு பார்முலா கார்பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டனுடன் இணைந்து, லாரஸ் விருதை வென்றிருந்தார் லியோனல் மெஸ்ஸி.

மற்ற விருதுகள்
சிறந்த விளையாட்டு வீராங்கனை : 
ஷெல்லி-ஆன் ப்ரேசர்-பிரைஸ் (தடகளம் - ஜமைக்கா)
சிறந்த அணி : அர்ஜெண்டினா ஆடவர் கால்பந்து அணி
சிறந்த வளரும் வீரர் : கார்லோஸ் அல்கராஸ் (டென்னிஸ் - ஸ்பெயின்)
சிறந்த மறுபிரவேசம் : கிறிஸ்டியன் எரிக்சன் (கால்பந்து - டென்மார்க்)
சிறந்த மாற்றுத்திறனாளி விருது : கேத்தரின் டெப்ரன்னர் 
(சக்கர ஒட்டப்பந்தயம் - சுவிஸ்)
அதிரடி விளையாட்டு விருது: எலைன் கு 
(பனிச்சறுக்கு சாகசம் - அமெரிக்கா)
சிறந்த நற்சான்று விருது : டீம்அப் அணிக்குழு

தமிழ்நாட்டில் இன்று ஐபிஎல்

                                        ஐபிஎல் - 2023

7-வது வெற்றியை ருசிக்குமா சென்னை? இன்று தில்லியுடன் மோதல்

16-வது சீசன் ஐபிஎல் தொடர் பரபரப்பாக நகர்ந்து வரும் நிலையில், புதனன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி தில்லியை எதிர்கொள்கிறது. 7-வது வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்துடன், பிளே ஆப் சுற்றுக்கு சாதக மான சூழ்நிலையை ஏற்படுத்தும் முனைப்பில் சென்னை அணியும், 5-வது வெற்றியை ருசித்து பிளே ஆப் கனவு அணியின் பட்டியலில் தில்லி அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை - தில்லி
இடம் : சேப்பாக்கம் மைதானம், சென்னை
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா. மெட்ரோ இலவசம் ; ஐபிஎல் தொடரை நேரில் காண சேப்பாக்கம் சேலம் ரசிகர்களுக்கு செவ்வாயன்று மேரோ ரயில் இலவசம்

யார் பந்துவீசினால் என்ன? நாங்கள் வெளுத்து வாங்குவோம் : மிரட்டும் இந்திய இளம் வீரர்கள்

முன்பெல்லாம் ஐபிஎல் தொடர் களில் இந்திய இளம் பேட்டர்களை  சாதாரணமாக அதாவது அலட்சியமாக எண்ணி சர்வதேச தர வீரர்கள் பந்துவீசு வார்கள். ஆனால் நடப்பு சீசனில்  எல்லாம் மாறி விட்டது. சர்வதேச தரம், முதல் தரம், 2-வது  தரம் என வீரர்கள் பிரிப்பின்றி அனை வருக்கும் ஒரே மாதிரியாக பந்துவீசும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சர்வதேச தரத்தில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் யார் பந்துவீசினாலும் சரி, ஒரு கை பார்த்துவிடும் எண்ணத்தில் இந்திய இளம் பேட்டர்கள் தைரியமாக சிக்ஸர், பவுண்டரி என விளாசி விடுகின்றனர். மேலும் முக்கியமான கடைசி கட்ட பரபரப்பு நேரங்களில் கிரிக்கெட் உலகில் அறியப்படாத இந்திய இளம் வீரர்கள் கூட மிரட்டி வெற்றியை வசமாக்கி விடுகின்றனர். இதனால் சில இந்திய இளம் பேட்டர்களை கண்டாலே சர்வதேச  தர வீரர்கள் மிரளுகின்றனர். 

மிரட்டல் பேட்டிங் கொண்ட இந்திய இளம் வீரர்கள்
1. ரிங்கு சிங் (பின் வரிசை - கொல்கத்தா)
2. ஜெய்ஸ்வால் (தொடக்க வீரர் - ராஜஸ்தான்)
3. திலக் வர்மா (நடுவரிசை - மும்பை)
4. ஜிதேஷ் ஷர்மா (நடுவரிசை - பஞ்சாப்)
5. ஆயுஷ் பதோனி (நடுவரிசை - லக்னோ)
6. அப்துல் சமத் (பின்வரிசை - ஹைதராபாத்)
7. ஜுரல் (பின்வரிசை - ராஜஸ்தான்)
8. வதீரா (நடுவரிசை - மும்பை)
9. ராகுல் திரிபாதி ( பின்வரிசை - ஹைதராபாத்)
10. சிம்ரன் சிங் (பின்வரிசை - பஞ்சாப்)

இதில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் சிறப்பான பார்மில் இந்திய அணியில் இடம்பிடிக்கக் கூடிய அளவில் விளையாடி வருகின்றனர். ரிங்கு சிங் அபாயகரமான வீரர் என்ற பெயரை நோக்கி பயணித்து வருகிறார். குஜராத் அணிக்கெதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவையை பூர்த்தி செய்தார். திங்களன்று கடைசி பந்தில் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார்.