விளையாட்டு உலகில் இந்தியாவிற்கு தனி கிராக்கி உள்ளது. தெரிந்த விளையாட்டோ, தெரியாத விளையாட்டோ எதுவாக இருந்தாலும் மிக எளிதாக பழகி விளையாடுவார்கள். சில வெறித்தனமான நபர்கள் தெரியாத விளையாட்டிலும் சாதனை படைக்க கூட போராடுவார்கள். இதுதான் இந்திய விளையாட்டு உண்மையான நிலைமை. ஆனால் சமீப காலமாக இந்திய விளையாட்டு உலகில் நாளுக்கு நாள் மாரடைப்பு மரண எண்ணிக்கை சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. அதுவும் 40 வயதிற்குட்பட்ட வீரர் - வீராங்கனைகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 பேர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதால் ஒருவித பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி மாத மாரடைப்பு மரணங்கள்
1. கர்நாடகம் : பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் விளையாட்டு விழாவின் கபடி போட்டியில் சங்கீதா (19) என்ற மாணவி மரணம்
2. தமிழ்நாடு : கரூர் கபடி போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணிக்கம் (26) என்பவர் மரணம்.
3. தெலுங்கானா : ஹைதராபாத் நகரில் உள்ள போவன்பல்லியில் இளம் விளையாட்டுப் பிரிவு போலீசாரான விஷால் (24) உடற்பயிற்சி நிலையத்தில் (ஜிம்) மரணம்
4.தெலுங்கானா : ஹைதராபாத்தில் ஜெய்சங்கர் உள்விளையாட்டு அரங்கத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த ஷியாம் (38) என்ற இளைஞர் மரணம்
5. தமிழ்நாடு : கடலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த ஹரிகரன் (21) உயிரிழந்தார்.
காரணம் என்ன?
விளையாட்டுத் துறையில் அல்லது விளையாட்டு ஆர்வத்தில் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாடு, ஓய்வு, உறக்கம் மற்றும் பயிற்சியில் சொல்லப்படும் கட்டுப்பாடுகளை கவனித்து பின்பற்றுவது அவசியம் ஆகும். அதுவும் கடினமான விளையாட்டுகளான கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, பளுதூக்குதல், ஆணழகன் பிரிவில் உணவு, நீர், உறக்கம் உள்ளிட்ட பயிற்சி வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உலக, மாநில அளவில் விளையாடும் வீரர்கள் ஓரளவு வழிகாட்டு நெறிமுறைகளை நன்றாக பின்பற்றி மாரடைப்பை தடுக்கிறார்கள். ஆனால் சாதாரண அல்லது மாவட்ட அளவிலான போட்டிகளில் போதிய அளவு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உயிரை விடுகின்றனர்.