games

img

இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐ: வெறுப்பு அரசியலை விதை தூவி வளர்க்க முயற்சி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை எவ்வித முக்கியத்துவம் இல்லாமல் நடத்திவிட்டு, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஐசிசி நடத்தும் 13-ஆவது உலகக்கோப்பை  ஒருநாள் போட்டி இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது.

வழக்கமாக கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில்தான் கலைநிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடைபெறும்.ஆனால், இந்த முறை தொடக்க விழா ஆட்டத்தின்போது பெரிதாக எவ்வித விழாவும் நடைபெறவில்லை.

இந்த தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் (அக்.14) மோதுகின்றன. ஆனால், இந்த போட்டிக்கு முந்தைய போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட கூடுதலாக நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், வருண் தவான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. எந்த சர்வதேச போட்டிகளிலும் இதுவரை காணாத வகையில் தொடரின் மத்தியில் மிக பிரமாண்ட நிகழ்ச்சியை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேவுள்ள அரசியல் காரணங்களால் பல முறை இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. 2008-ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு இருதரப்புக்கும் இடையே எந்த தனிபட்ட போட்டிகளும் பயணங்களும் நடைபெறவில்லை. உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற சர்வதேச தொடர்களில் மட்டுமே இரு அணியினரும் ஒன்றாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், வெறுப்பை வைத்து வணிகம் செய்யும் விதமாக கிரிக்கெட் வாரியம், சர்வதேச தொடர்களுக்கான அட்டவணையை முக்கியப் போட்டிகளில் இரு அணிகளும் மோதும் வகையிலேயே தயாரித்து வருகின்றது.

குறிப்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் அட்டவணையில் எந்த லீக் போட்டிக்கும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்படாத நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல, இந்த முறையும் உலக்கோப்பை அட்டவணை வெளியானது முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

முதலில், இந்த உலகக்கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி பட்டியலிடப்பட்டது. ஆனால், அகமதாபாத்தில் குறிப்பிட்ட நாளில் நவராத்திரி விழா நடைபெறுவதால் ஒருநாள் முன்னதாக போட்டி மாறப்பட்டு மறு அட்டவணை வெளியிட்டப்பட்டது. பிசிசிஐ-யின் முடிவை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் பிர நாடுகளும் தங்களின் போட்டிகளை மாற்றி அமைக்க ஒப்புக்கொண்டன.

உண்மையிலேயே பாதுகாப்பு காரணமாக இருந்தால், வேறு மைதானத்துக்கு போட்டியை மாற்றி இருக்கலாம். ஆனால், 1.32 லட்சம் பேர் அமரும் மோடி மைதானத்தைவிட்டு போட்டி மாற்றப்பட்டால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்ற காரணத்தால் மொத்த அட்டவணையும் மாற்றப்பட்டது.

மேலும், இணையதளத்தில் போட்டியை காண டிக்கெட் பெற்ற ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய தூதரகம் விசா வழங்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தீவிரவாதிகள் எல்லை மீறும் பிரச்சனை முடியும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறாது எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியை விளம்பரம் செய்து வர்த்தமாக மாற்றுவதாக பிசிசிஐ செயலாளரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை இணையத்தில் பல்வேறு தரப்பினர் சாடி வருகின்றனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின்போது இந்தியா-பாகிஸ்தான் விளையாடிய போட்டியின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பை மட்டும் 27.3 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை வைத்து பல நூறு கோடி ரூபாய் லாபத்தை ஈட்ட கிரிக்கெட் வாரியமும், பன்னாட்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை இரு அணிகளுக்கு இடையேயான போட்டியாக பார்க்காமல், இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,மத ரீதியாகவும் மோதுவது போல் காட்டும்போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை வைத்து சங்பரிவாரத்தினரும் தங்களது வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர். இங்குள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் இடுகிறார்கள். பாகிஸ்தான் கொடியை பிடிக்கிறார்கள் என்று  வதந்தியை பரப்பி தங்களது வெறுப்பு அரசியலை செய்கின்றனர்.

விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல், இந்தியா-பாகிஸ்தான்  அணிகள் மோதும் போட்டியின் மூலம் வெறுப்பு அரசியலை விதைத்து, அதன்மூலம் பெரும் லாபத்தையும் குவிக்கு பெரும் வணிகர்களின் சூழ்ச்சி அரசியலுக்குள் இரு நாட்டு ரசிகர்களும் சிக்காமல் இருப்பது நல்லது.