ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்
பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெற்று வரும் 16-வது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெறும் “சூப்பர் 4” சுற்றின் 5-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிக முக்கியமானது ஆகும். காரணம் வெற்றி பெறும் அணி இறுதிக்கு முன்னேறும் என்பதால் பாகிஸ்தான் - இலங்கை ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் - இலங்கை
நேரம் : மதியம் 3 மணி
இடம் : பிரேமதேச மைதானம், கொழும்பு, இலங்கை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)
கிளப் கால்பந்தில் ஊக்கமருந்தா?
புதிய அதிர்வலையை ஏற்படுத்தும் இத்தாலி ஆணையம்
பொதுவாக விளையாட்டு உலகில் தங்களது திறனை அதிகரிக்க, தசை வலுவாக இருக்க, எளிதில் சோர்வடையாமல் இருக்க ஒரு மருந்தை பயன்படுத்துவார்கள். இதனையே ஊக்கமருந்து எனக் கூறுவார்கள். எந்தவொரு சர்வதேச போட்டியாக இருந்தாலும் ஊக்கமருந்து சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். ஆனால் தடகள உலகில் ஊக்கமருந்து சோதனை மிக மோசமாக இருக்கும். காரணம் மற்ற விளையாட்டு போட்டிகள் போல அல்லாமல் ஒவ்வொரு போட்டி நடைபெறும் முன்னரோ அல்லது போட்டி நிறைவு பெற்ற பின்னரோ ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகளில் இருந்து ஊக்கமருந்து சோதனை மேற்கொள்வார்கள். ஆனால் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற பெரிய விளையாட்டுகளில் ஊக்கமருந்து சோதனையை கண்டுகொள்ளமாட்டார்கள். இதனால் தடகளம் மட்டுமே அடிக்கடி ஊக்கமருந்து சோதனையில் சிக்கும் வாடிக்கை நிலை உள்ளது. ஆனால் கால்பந்து உலகில் உலகின் நட்சத்திர வீரர் ஒருவர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடை உத்தரவு பெற்றுள்ளது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சர்வதேச அல்லாத கிளப் போட்டியில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய போக்பா
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான பால் போக்பா (30) பிரான்ஸ் தேசிய அணிக்காக வும், இத்தாலியின் ஜீவன்டஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2018-இல் பிரான்ஸ் அணி உலகக்கோப்பை வென்ற தருணத்தில் அணியில் முக்கிய நட்சத்திர வீரராக ஜொலித்தவர். இந்நிலையில், ஜீவன்டஸ் கிளப் ஆட்டத்தின் பொழுது போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது “ஏ மாதிரி” சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் போக்பா ஜீவன்டஸ் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். போக்பா “பி மாதிரி” சோதனையை மேற்கொள்ளுமாறு இத்தாலி ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். “பி மாதிரி” சோதனையிலும் போக்பா ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணமானால் 2 முதல் 4 ஆண்டு வரை போட்டிகளில் தடை ஆணையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. கிளப் போட்டிகள் சாதாரண உள்ளூர் போட்டிகள்தான். இங்கு ஊக்கமருந்து சோதனைக்கு வேலை இல்லை. ஆனால் இத்தாலி ஆணையம் ஊக்கமருந்து சோதனையை மேற்கொண்டு தன் நாட்டுக்கு விளையாடும் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரை சஸ்பெண்ட் செய்துள்ள விவகாரம் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.