தன்னுடைய கனவு முடிவுக்கு வந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிப் போட்டிகள் நிறைவடைந்து குரோஷியா, அர்ஜெண்டினா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியுடன் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது. இதனால் கண்ணீருடன் மைதானத்திலிருந்து ரொனால்டோ வெளியேறியது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, ”என்னுடைய வாழ்க்கையில் போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தரவேண்டும் என்பதே என் வாழ்நாள் கனவாக இருந்தது. நல்வாய்ப்பாக நான் சர்வதேச அளவில் பல கோப்பைகளை வென்றுள்ளேன். எனினும் என் நாட்டின் பெயரை சர்வதேச அளவில் கொண்டு செல்லவேண்டும் என்பதே கனவாக இருந்தது. இந்தக் கனவுக்காக நான் போராடினேன். கடந்த 16 வருடங்களில் 5 உலகக் கோப்பைகளில் கோல்கள் அடித்துள்ளேன்.
மிகச்சிறந்த வீரர்களுடன் விளையாடினேன். லட்சக்கணக்கான போர்ச்சுகல் ரசிகர்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். அணிக்காக அனைத்தையும் வழங்கினேன். போட்டியிலிருந்து நான் பின்வாங்கியதில்லை. கனவை விட்டுக்கொடுக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக கனவு முடிந்தது. இதைப் பற்றி பலரும் பலவிதமாக எழுதிவிட்டார்கள், பேசி விட்டார்கள். அனைவருக்கும் ஒன்றைத் தெரியப்படுத்த விரும்புகிறேன், போர்ச்சுகல் அணிக்கான என்னுடைய உழைப்பு ஒருபோதும் மாறவில்லை. அனைவரும் கோலடிக்க உதவும் இன்னொரு வீரராக நான் இருந்தேன். என் அணிக்காகவும் வீரர்களுக்காகவும் நான் எப்போதும் மறுத்ததில்லை. இப்போது மேலும் எதுவும் சொல்வதற்கில்லை. போர்ச்சுகலுக்கு நன்றி, கத்தாருக்கு நன்றி. கனவு இருந்தவரை அது அழகானதாக இருந்தது. தற்போது காலம் சிறந்த ஆலோசனையை வழங்கி ஒவ்வொருவரும் ஒரு முடிவுக்கு வர உதவும்” என்று கூறியுள்ளார்.