22-வது சீசன் உலகக்கோப்பை தொடர் அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பை தொடர் பிரம்மாண்ட செலவில் அமைக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட 8 மைதானங்களில் நடைபெற்றது. சீனியர் நாடுகளின் அதிர்ச்சிகள், இளம் அணிகளின் கலக்கல் வெற்றி என குரூப் சுற்று முதலே ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா அணியும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் உலகக்கோப்பைக்கான பலப்பரீட்சையில் ஈடுபட்டது. ஞாயிறன்று லுஸைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியிலேயே அர்ஜெண்டினா அணி 2 (மெஸ்ஸி 23’ (பெனால்டி) - ஏஞ்சல் டி மரியா ‘35) கோல்கள் அடித்து அசத்தியது. அதன் பின்பு பிரான்ஸ் அணி கடுமையாக போராடியும் ஆட்டத்தின் 75-வது நிமிடம் வரை பதிலுக்கு கோலடிக்கவில்லை.
இதனால் ஆட்டம் நிறைவுபெறுகிறது. அர்ஜெண்டினா அணி கோப்பையை எளிதாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் நட்சத்திர வீரர் மாப்பே 80-வது நிமிடத்தில் (பெனால்டி) கோலடிக்க ஆட்டம் சற்று பரபரப்பானது. அடுத்த ஒரு நிமிட இடைவெளியில் மாப்பே மீண்டும் கோலடிக்க அர்ஜெண்டினா வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆட்டத்தின் முழுநேரத்தில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்த நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 108-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா நட்சத்திரம் மெஸ்ஸி கோலடித்தார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (108’) கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மாப்பே கோலடிக்க கூடுதல் நேரமும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறைவடைந்தது. பிறகு பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. கடுமையான போராட்டத்திற்கு இடையே அர்ஜெண்டினா அணியின் கோல் கீப்பர் மார்டீன்ஸின் கலக்கலான ஆட்டத்தால் 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது அர்ஜெண்டினா.
ஆசானின் ஆசையை நிறைவேற்றிய வாரிசு...
அதிரடி ஆட்டம், மிரட்டலான ஓட்டம், வெளிப்படையான கருத்துக்கள், இடதுசாரி கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம், புரட்சி நாயகன் சேகுவேராவின் தீவிர ரசிகர், பிடல் காஸ்ட்ரோவுடன் நட்பு என கால்பந்து விளையாட்டு மட்டுமின்றி அரசியல், மக்கள் போராட்டம் என அனைத்து பிரிவுகளிலும் ஆல்ரவுண்டரான டீகோ மாரடோனா தன்னுடைய காலத்தில் உலகக்கோப்பையை கைப்பற்றியது போல, தனது வாழ்வின் கடைசி காலத்தில் அர்ஜெண்டினா கண்டிப்பாக கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என ஆசைப்பட்டார். இதற்காக மெஸ்ஸியை தனது விளையாட்டு வாரிசாக அறிவித்து, கோப்பையை கைப்பற்ற 2008-ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணியின் தேசிய பயிற்சியாளர் பதவியை ஏற்று அணியை திறம்பட வழிநடத்தினார். 2010-ஆம் ஆண்டு தொடரில் (தென் ஆப்பிரிக்கா) காலிறுதி வரை சென்ற அர்ஜெண்டினா எதிர்பாராவிதமாக ஜெர்மனி அணியிடம் 4-0 கணக்கில் தோற்க, கனத்த இதயத்துடன், கண்ணீர் தழும்ப பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்பு 2014, 2018-ஆம் ஆண்டு தொடரில் அர்ஜெண்டினாவின் முக்கிய ரசிகராக ஒவ்வொரு ஆட்டங்களிலும் உணர்ச்சி பொங்க ஆதரவளித்தார். ஆனால் மாரடோனாவின் கோப்பை கனவு மட்டும் நனவாகவில்லை. உடல்நலக்குறைவால் 2020-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி மாரடோனா மறைந்த நிலையில், கத்தார் சீசனில் தனது ஆசானின் (மாரடோனா) கனவை கடுமையான போராட்டத்துக்கு இடையே நிறைவேற்றினார் வாரிசு (மெஸ்ஸி).