games

img

நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள்...விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விளையாட்டு வீரர்கள்

புதுதில்லி:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது பெற்றவர்கள் உள்பட பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் 7-வது நாளாகபுதனன்றும் நடைபெற்றது.இந்நிலையில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருதுபெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா,அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர்கவுர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களும் டிசம்பர் 5 ஆம் தேதி தில்லிக்குச் சென்று தங்கள் விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்திய  மத்திய அரசையும், அரியானா அரசையும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக சஜ்ஜன் சிங் சீமா கூறுகையில், ‘நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள்,அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு வன்முறைச் சம்பவம் கூட நடக்கவில்லை. ஆனால், அவர்கள் தில்லிக்குச் செல்லும்போது அவர்களுக்கு எதிராக நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் பெரியவர்கள் மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டால், எங்கள் விருதுகள் மற்றும் கவுரவத்துடன் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனால்தான் விருதுகளை திருப்பித் தருகிறோம் என்று தெரிவித்தார்.தில்லி எல்லையில் டிசம்பர் 5 அன்றுநடைபெறும் போராட்டத்தில் பல முன்னாள் வீரர்களும் இணைவார்கள் என்று விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி ஆதரவு தெரிவித்துள்ளார்.

;