மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருவது ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் (50 ஓவர்) தொடரை 0-3 என இழந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி-20 (20 ஓவர்) கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி புதனன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் துவங்கியது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலின் பந்துவீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், தொடக்க ஆட்டக்காரரான பிரெண்டன் கிங் 4 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக விளையாடி வந்த கைல் மேர்ஸ் (31) சஹல் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்ததால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஸ்டன் சேஸ் (4), ரௌவ்மேன் (2) இருவரையும் ஒரே ஓவரில், அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் வெளியேற்றினார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி இக்கட்டான நிலைக்கு சென்றது. அதேநேரத்தில், அகில் ஹோசைனும் 12 ரன் எடுத்து, தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 14 ஓவர்களில் 90/5 எனத் திணறியது.
இதன்பின், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான நிகோலஸ் பூரன், கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இதையடுத்து பூரன் 61 ரன்கள் எடுத்து, ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் பொல்லார்ட் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது.
இதன்பின் களமிறங்கிய இந்திய 19 ஆவது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 162 ரன் குவிந்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.
இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இத்தொடரின் அடுத்த போட்டி பிப்.18 ஆம் தேதியன்று ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது.