இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி ரோகித் சர்மா (131), ஜடேஜா (112) ஆகியோரின் சதத்தால் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் டக்கெட்டின் (153) அபார ஆட்டத்தால் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 126 முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் (214) இரட்டை சதம் மற்றும் கில் (91), சர்பிராஸின் (68) ஆகியோரின் அதிரடியால் இரண்டாவது இன்னிங்சில் 98 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்காக 557 ரன்களை நிர்ணயம் செய்தது.
மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜடேஜா, குலதீப்பின் சூழலை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே மிடில் ஆர்டரை இழந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் சரிந்தது. 39.4 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டமிழந்த நிலையில், இதன்மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 4வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் துவங்குகிறது.
ஒரே தொடரில் அடுத்தடுத்து இரட்டை சதம்
இந்திய அணியின் இளம் வீரரும், தொடக்க அதிரடி ஆட்டக்காரருமான ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (209) அடித்தார். தொடர்ந்து 3-ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் ஜெய்ஸ்வால் (214) இரட்டை சதமடித்து கலக்கி யுள்ளார். போதுமான அளவு சர்வதேச போட்டிக்கான அனுபவம் இல்லாத நிலையில், பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியிடம் அடுத்தடுத்து இரட்டை சதமடித்து கிரிக்கெட் உலகை மிரட்டியுள்ளார் ஜெய்ஸ்வால்.