games

img

விளையாட்டு

ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
இன்றுடன் “சூப்பர்4” நிறைவு

இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் 16-வது சீசன் ஆசியக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது “சூப்பர் 4” சுற்று நடைபெற்று வருகிறது.  “சூப்பர் 4” சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில், இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் 2 வெற்றியுடன் இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் கடைசி “சூப்பர் 4” சுற்று ஆட்டம் வெள்ளியன்று நடைபெறு கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி ஏற்கெனவே இறுதிக்கு முன்னேறியுள்ளதாலும்,  வங்கதேச அணி தொடரை விட்டு ஏற்கெனவே வெளியேறியுள்ளதாலும் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான்.

இந்தியா - வங்கதேசம்
நேரம் : மதியம் 3 மணி
இடம்:பிரேமதேச மைதானம், கொழும்பு, இலங்கை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)
மழை : 80% மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்தியர்கள் இல்லாமல் நகரும் ஹாங்காங் பேட்மிண்டன்

பேட்மிண்டன் உலகில் முக்கிய தொடரான ஹாங்காங் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்ற இந்திய வீரர் - வீராங்கனைகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறிவிட்டனர். ஆடவர், மகளிர் என இரு பிரிவு களிலும் 10-க்கும் மேற்பட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தும், ஒருவர் கூட இந்தியா சார்பில் காலிறுதிக்கு தகுதி பெற வில்லை என்பது சோகமான விஷயம் ஆகும். ஆட்டமுறையில் மாற்றம் தேவை தற்போதைய சொதப்பலான பார்முக்கு காரணம், புதிய விளையாட்டு உத்திகளை இந்திய வீரர் - வீராங் கனைகள் இன்னும் மேற்கொள்ளாமல் பழைய முறை யிலேயே விளையாடுவதுதான். சீனா, ஜப்பான், மலேசியா,  சீன தைபே, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் ஒவ்வொரு தொடர்களிலும் ஒவ்வொரு அதிரடி  ஆட்டமுறையுடன் களமிறங்குகின்றனர். ஆனால் இந்தி யர்கள் ஒரே ஆட்டமுறையை ஒவ்வொரு தொடர்களிலும் வெளிப்படுத்துகிறார்கள். முக்கியமாக சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியர்கள் திணறு கிறார்கள். இதன் காரணமாகவே முக்கிய பேட்மிண்டன் தொடர்களில் இந்தியர்கள் சொதப்பலான ஆட்டத்துடன் வெளியேறுகிறார்கள். பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், இந்திய பேட்மிண்டன் பிரிவின் மோசமான பார்ம் கவலை அளிப்பதாக உள்ளது. 

தெரிந்துகொள்வோம்...

விளையாட்டு உலகில் முக்கிய வெளியரங்கு போட்டிகளாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, ரக்பி, பேஸ்பால் ஆகியவை உள்ளது. வெளியரங்கு போட்டிகள் மழையால் அடிக்கடி பாதிக்கப்படும் என்பதால், தடையின்றி போட்டி நடைபெற கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, ரக்பி ஆகிய விளையாட்டுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து, மழை  பெய்தாலும் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் வகையில் பிரம்மாண்ட மூடிய வான மேடை அமைக்கப்படுகிறது. ஆனால் விளையாட்டு உலகில் 2-வது அதிக ரசிகர்களை கொண்ட போட்டியான  கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் இன்னும் மழைக்கு மாற்று ஏற்பாடு எதுவும் திடமாக செயல்படுத்தமுடிய வில்லை. காரணம் கிரிக்கெட் விளையாட்டில் பந்து தாறுமாறான வேகத்தில், கட்டுப்பாடற்ற உயரத்தில் பறக்கும் என்பதால்தான். அதாவது கிட்டத்தட்ட 100 அடிக்கு மேல் பந்து பறக்கும் என்பதால் மழை தடுப்பு மேடை அமைப்பது சிரமமான காரியம் ஆகும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்பு தடுப்பு மேடை அமைத்து போட்டியை நடத்தி பார்த்தது. ஆனால் ஒரு ஓவரின் பெரும்பாலான பந்துகள் மேடையில் அடித்து கீழே விழுந்ததால் இந்த திட்டத்தை கைவிட்டது.  இதனால் கிரிக்கெட் விளையாட்டில் மழை தடுப்பு மேடை  ஒத்திவைக்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டை போன்று “பேஸ்பால்” விளையாட்டிலும் மழை தடுப்பு மேடை அமைக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.