கால்பந்து உலகக்கோப்பை அறிவிப்பும்... சர்ச்சைகளும்...
ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான கால்பந்து உலகக்கோப்பை தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
இந்நிலையில், 23ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. தொடர்ந்து 2030 (24ஆவது சீசன்) மற்றும் 2034ஆம் ஆண்டு (25ஆவது சீசன்) நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி 2030ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை ஸ்பெயின் (ஐரோப்பா), போர்ச்சுக்கல் (ஐரோப்பா), மொராக்கோ (ஆப்பிரிக்கா), அர்ஜெண்டினா (தென் அமெரிக்கா), பராகுவே (தென் அமெரிக்கா), உருகுவே (தென் அமெரிக்கா) உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2034ஆம் ஆண்டு பிபா கால்பந்து தொடரை ஆசிய நாடான சவூதி அரேபியா நடத்தும் என்று தலைவர் சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பானிட்டோ அறிவித்தார்.
3 கண்டங்களில் உலகக்கோப்பை
23ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. ஆனால் இந்த தொடர் ஒரே கண்டத்தில் (வட அமெரிக்கா) நடைபெறுகிறது. ஆனால் 2030ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா என 3 கண்டங்களில் நடைபெறும் என பிபா அறிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் (லீக், நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதி) பல ஆயிரம் மைல் தூரம் பயணிக்க வேண்டும் என்பதாலும், 6 நாடுகளில் விசா எடுக்க வேண்டும் என்பதாலும் 2030ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை அறிவிப்புக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எவ்வளவு பணம்?
22ஆவது கால்பந்து உலகக்கோப்பை சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்றது. கால்பந்து விளையாட்டில் பெரியளவு பின்புலம் இல்லாத கத்தாருக்கு ஏன் பிபா உலகக்கோப்பை நடத்த வாய்ப்பு வழங்கியது என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியது. அதன்பிறகு உலகக்கோப்பை போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எண்ணெய் வளமிக்க கத்தார் அரசிடம் பல ஆயிரம் கோடி பணம், பரிசுப்பொருட்கள், எண்ணெய் வளம் சார்ந்த முதலீடு ஆகியவற்றை பிபா தலைவர் ஜியானி வாங்கிக்கொண்டு உலகக்கோப்பை நடத்தும் வாய்ப்பை கத்தாருக்கு வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் போட்டுடைத்தன. இந்நிலையில், 25ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள எண்ணெய் வளமிக்க சவூதி அரேபியாவும் பிபா தலைவர் ஜியானிக்கு கத்தாரைப் போலவே பல்வேறு வெகுமதிகளை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான ஆதாரம் விரைவில் வெளியாகும் என சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.