உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் இந்திய நேரப்படி வெள்ளியன்று நள்ளிரவு 11:30 மணிக்கு தொடங்கியது. 206 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா உலகின் முக்கிய சுற்றுலாத்தலமான ஈபிள் டவருக்கு அருகே பாயும் செயின் நதிக்கரையில் நடைபெற்றது. நாடுகளின் அணிவகுப்பு செயின் நதிக்கரையில் படகு மூலமாக நடைபெற்ற நிலையில், தொடர்ந்து சிறப்பு கலைநிகழ்ச்சிகள், லேசர் மின்விளக்கு கலை நிகழ்வுகள், சிறப்பு வாணவேடிக்கை என பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் ஒலிம்பிக் திருவிழா தொடங்கிய நிலையில், பாரீஸ் விழாக்கோலம் பூண்டது. குறிப்பாக லேசர் தொழில்நுட்பத்தால் ஈபிள் டவர் வானவில்லை போன்று ஜொலித்தது.
சீனாவிற்கு முதல் தங்கம்
10 மீட்டர் ஏர் கலப்பு அணி பிரிவு இறுதி சுற்றில் சீனாவின் செங் - ஹுவாங் ஜோடியும், தென் கொரியாவின் கியூம் - பார்க் ஜோடியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றில் 16-12 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் செங் - ஹுவாங் ஜோடி வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் முதல் தங்கப்பதக்கத்தை சீனா வென்ற நிலையில், தென் கொரியா முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மேலும் கஜகஸ்தான் - ஜெர்மனி ஆகிய நாடுகள் மோதிய வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில், 17-5 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் வெற்றி பெற்று முதல் வெண்கலப்பதக்கத்தை வென்றது.
பொதுவாக ஒரு ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை வெல்வது கவுரவமான விஷயம் என்ற நிலையில், கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரைப் போல பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலும் முதல் தங்கப்பத க்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது சீனா.
டைவிங்கிலும் சீனாவிற்கு தங்கம்...
மகளிர் இரட்டையர் 3 மீ டைவிங் பிரிவில் சீனாவின் செங் - சென் ஜோடி 337.68 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது. 314.64 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்த அமெரிக்காவின் சாரா - கூக் ஜோடி வெள்ளிப்பதக்கத்தையும், பிரிட்டனின் யாஸ்மின் - ஜென்சென் ஜோடி 302.28 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.