facebook-round

img

வர்க்கப் போரை நடத்தும் செங்கொடி!

நீங்கள் தான் தோற்றுப் போனீர்களே
கழுதை தேய்ந்து கட்டெறும்பானீர்களே
எங்க ஊருக்கு நீங்க சரிப்படமாட்டீங்களே
உங்களுக்குதா எதிர்காலமே இல்லையே

அந்த வல்லூறுகள் கத்திக்கத்தி ஓய்ந்தன
அந்த ஓநாய்கள் ஊளையிட்டு மாய்ந்தன
அந்த கோட்டான்கள் கூவிக்கூவி சலித்தன
அந்த ஆலைச்சங்குகள் ஊதி ஒடுங்கின

வரலாற்றின் முடிவு என்றார்கள்...
தத்துவத்தின் மரணம் என்பார்கள்
இரங்கற்பாக்களை இசைப்பார்கள்
சமாதிகளைக் காட்டி கெக்கலிப்பார்கள்...

இந்த இரைச்சலை இசை என்போர்...
இந்த கத்தலை கவிதை என்போர்
இந்தக் கூச்சலை குயில் பாடல் என்போர்
ஆலோசனைகளை அள்ளி வீசினார்கள்!

ஆனால், பள்ளம் மேடுகள் உள்ள வரை...
பஞ்சம் பட்டினி வாட்டி வருத்தும் வரை
தொப்பைகள் துள்ளி விளையாடும் வரை
வளங்களை யாவும் வாரிச்சுருட்டும் வரை

நீலவானில் உலாவும் செங்கொடி
ஆலைகள் தோறும் பறக்கும் செங்கொடி
வயல்வெளி யாவும் நிறைத்தே செங்கொடி
வர்க்கப் போரை நடத்தும் செங்கொடி!

- சூர்யா, கோவை.

;