ஆனைச் சாத்தன் பறவைக் குறித்து சோ.தர்மன் அவர்கள் பேசிய காணொளி இன்று கவனத்துக்கு வந்தது. ஆனைச் சாத்தன் குறித்து இன்னும் விவரமாக பத்தாண்டுகளுக்கு முன்னரே (தோழர் Dayalan Shunmuga பதிவுசெய்தது) நான் பேசிய காணொளி ஒன்று இன்றும் யூட்யூப்பில் இருக்கிறது. அதுவல்ல செய்தி. வழக்கமாக இலக்கிய வம்புகளில் நான் பங்குபெறுவதில்லை என்றாலும், மூத்த இலக்கியவாதி ஒருவர் தவறான செய்திகளை அளிக்கும்போது அது வருத்தமளிக்கிறது. அதுவும் ஒரு சூழலியல் தொடர்பான செய்தி என்பதால் பதில் அளிப்பது கடமையுமாகிறது.
தருமர் பேசும்போது ஆனைச் சாத்தன் என்ற சொல்லுக்கு உரை எழுதிய அத்தனை உரையாசிரியர்களும் அதை ஒரு பறவை என்று மட்டுமே குறிப்பிட்டதாகவும், இவர்தான் அதை ‘கரிச்சான்’ என்று கண்டுபிடித்ததாகவும் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் தவறு. ஆண்டாளின் பாடலுக்கு ஆதியில் உரையெழுதிய பிரதிவாத பயங்கரம் அண்ணங்கச்சாரியாரே (காலம் 1340-1440) ஆனைச் சாத்தனை அடையாளம் கண்டுவிட்டார்.
“ஆனைச் சாத்தம் எனினும் ஆனைச் சாத்தன் எனினும் ஒக்கும். பரத்வாஜ பட்சி வலியனென படுமென்ப’ என்கிறார். வலியன் கரிச்சானின் மற்றொரு பெயர். மயிலைநாதர் உரையிலும் வலியன் என்றே குறிப்பிடப்படுகிறது. பிரதிவாதி பயங்கரம் இதுகுறித்து மேலும் விளக்கும்போது, “ஆனைச் சாத்தன் என்ற பதப் பிரயோகம் கவனிக்கத்தக்கது. இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாக தமிழில் வழங்குவதென்பர். (ஆன சாதம்) என்று மலைநாடர் வலிய எனும் பறவையை வழங்குவாராம். இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதரித்தவராதலால் அத்திசை சொல் இங்கு பரவசமாகவே அமைந்தது போலும்” என்கிறார்.
ஆக, ஆனைச் சாத்தன் என்கிற திசைச் சொல்லையே ஆண்டாள் தன் பாடலில் இடம் பெற செய்கிறாள் என்பது உறுதியாகிறது. இது சங்க இலக்கியத்தில் உள்ள சூழலியல் செய்திகளை ஆராய்ந்து பல அரிய நூல்களை எழுதியுள்ள அறிஞர் பி.எல்.சாமி அவர்களைக் கவர்கிறது. அவர் ஒரு மாவட்ட ஆட்சியராகவும் இருந்தவர். அவர் கேரள மாநிலம் மாஹேயில் ஆட்சியராக பொறுப்பேற்ற அக் காலத்தில் ஆனைச் சாத்தன் குறித்து ஆராய முனைகிறார். அப்போதுதான் கேரளத்தில் மிகவும் பழக்கமான பறவைகளைச் சாத்தன் என்றழைப்பதைக் காண்கிறார். குறிப்பாக விடியலில் கூவிடும் கோழிக்கு ‘கோழிச் சாத்தன்’, மீன்கொத்திக்கு, ‘மீன்கொத்தி சாத்தன்’, கரிச்சானுக்கு ‘ஆனைச் சாத்தன்’. நீண்டவால் கொண்ட மலைப்பகுதி கரிச்சானுக்கு, ‘காராடன் சாத்தன்’.
சாத்தன் சரி ஆனை எப்படி வந்தது? கேரள வள்ளுவ நாட்டுப் பகுதியில் இதை ‘ஆனைராஞ்சி’ என்கின்றனர். இது ஆனையை உராய்ந்து பறக்குமாம். இதை, உயிரியலில் ‘நடத்தை பண்பு’ என்பர். ஓர் உயிரினத்தின் நடத்தையைக் கூர்ந்து கவனித்து அறிவது. இவ்வளவும் சேர்ந்ததே ஆனைச் சாத்தன்.
அதுபோல ஆனைச் சாத்தன் கத்தும் நேரம் என்று தர்மர் குறிப்பிடும் நேரமும் தவறானது. மேலும் எந்தெந்த அறிஞர்கள் ஆனைச் சாத்தன் என்ற பறவையை தவறாகக் கணித்தனர்? ஆனைச் சாத்தன் வைதீகத்துக்குச் சார்பாக எப்படியெல்லாம் திரிக்கப்பட்டது? பிற இலக்கியங்களில் அப்பறவைக்கு வழங்கப்பட்ட இன்னும் ஏராளமான பெயர்கள் என்னென்ன? சாத்தன் என்பது உயர்திணை சொல். அது அஃறிணை பறவைக்கு எப்படி பொருந்தியது? ஆனைச் சாத்தன் என்ற சொல் தமிழில் மறைந்து போனதற்கான சூழலியல் காரணம் என்ன ? என்பது போன்ற இன்னும் நிறைய செய்திகள் உள்ளன. விரிவு கருதி அவற்றை இங்குத் தவிர்க்கிறேன்.
-சூழலியலாளர் நக்கீரன் முகநூல் பதிவு
சூழலியாளர் நக்கீரன் முகநூல் பதிவின் பின்னூட்டத்தில் எழுத்தாளர் சோ தர்மன் ” ஏற்றுக் கொள்கிறேன் நக்கீரன்.நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் முக்கியமானவை.நான் தவறுதலாக ஏதாவது கூறியிருந்தால் திருத்திக் கொள்கிறேன்.
என பதிவு செய்துள்ளார்.
எழுத்தாளர் சோ தர்மன் கரிச்சான் பறவை குறித்து பேசிய காணொளி: https://www.youtube.com/watch?v=-RvNIpesSyY