facebook-round

img

நுாறென்பது வெறும் வயதல்ல...

அலைகள் ஆர்ப்பரிக்கும் கடலில்
அந்த மீனவன் செங்கொடி உயர்த்தினான்
ஆழக்கடலின் சிப்பிகளுக்கும்
அங்கு முத்துக்குளிப்போன் காட்டினான்

நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களில்
அந்த ஆதிவாசி கொடி ஏற்றினான்
அடர் வனக்காடுகளுக்குள் — அந்த
மலை மகன் கொடி நாட்டினான்

ஆலைச் சங்குகளுடன் போட்டியிட்டு
தொழிலாளி சங்கநாதம் முழங்கினான்
வயல் வரப்புகளில் காடு கழனிகளில்
விவசாயத் தோழன் உரமூட்டினான்

ஊரெங்கும் சேரியெங்கும் ஓடியாடி
நாடெங்கும் நகரெங்கும் ஆடிப்பாடி
போராட்டக் கொடி துாக்கினோம்
மக்கள் சிந்தையில் தீ மூட்டினோம்!

என் இந்தியத் தோழனே...
செங்கொடிக்கு நுாறென்பது வெறும் வயதல்ல...
வார்த்தைகளில் சொல்ல முடியா வலி அது
வசந்தத்திற்கான வாடி வாசல் இது!

ஓர்லி, சுர்மா, கையூர், மலபாரெல்லாம்
வெறும் வாய் வீச்சுகள் அல்ல
அது வர்க்கச் சமரின் உலைக்களங்கள்
பாட்டாளிகளின் பராக்கிரமங்கள்!

வெண்மணி, சின்னியம்பாளையம்
வீரத்தெலுங்கானா, நாசிக் எல்லாம்
தியாக் கொடியின் செந்தடங்கள்
அதுவே வீரம் விளைந்த சமரங்கள்

விடுதலைப் போரினில் வேருக்கு நீரும்
பிந்தைய நாட்டில் விழலுக்கு நீருமாய்
வர்க்கப்போரிலே வாழ்க்கை நகருது
வீர வெஞ்சமரில் காலம் பறக்குது...

நுாறென்பது வெறும் வயதுமில்லை
வர்க்கப் போரின்றி விடியலுமில்லை!

—சூர்யா, கோவை.