facebook-round

img

அந்த சவப்பெட்டிக்கு இறுதி ஆணியை அடிப்போம்!

அனைவருக்கும் ஆப்பிளாக... 
பலருக்கும் பனிமலையாக
சிலருக்கு பள்ளத்தாக்காக
இருந்திருக்கலாம்....காஷ்மீர்!

இன்றோ...
எரிமலையின் தகிப்பாக
ஏழைகளின் கோபமாக
ஏதிலிகளின் உக்கிரமாக
அர்த்தம் கொண்டுள்ளது...
அந்தக் காஷ்மீர்...

அதன் சில்லிடும் குளிரில்
அடர்வனத்தின் இருளில்
துப்பாக்கிகளுக்கு தப்பி பிழைத்து
தோட்டாக்களுக்கு தண்ணிகாட்டி
செங்கொடியை உயர்த்தியவன்...

பனி மூட்டங்களுக்கிடையே
ஓடி... ஓடி...அனல் மூட்டியவன்
பாட்டாளிகளிடம் களமாடி
கோபக் கனல் மூட்டியவன்!

அதிகாரத்தின் கொட்டடியில்
அந்த ராணுவத்தின் பிடியில்
பாசிசத்தின் கொடுமையில்
வீட்டுச் சிறையில் தள்ளப்பட்டான்
அந்த காஷ்மீரத்து சிங்கம் யூசுப்...

அதிகாரத்துக்கு பணிந்தோ
அக்கிரமத்துக்கு வாலாட்டியோ
கோபத்துக்கு பயந்தோ வாழ்ந்து
பழக்கமில்லாத அவன் தோழன்...

அதிகார பீடத்தை அசைத்து
பூட்டிய இரும்புக் கூடுடைத்து
ராணுவத்தின் அணிவகுப்புக்குள்
பெல்லட்டுகளின் இடைவெளிக்குள்
போராளித் தினவோடு சென்று...
"தோழா..." என்று கட்டியணைத்தான்!

தோட்டாக்களின் துயரக் கதைகள்
ஆதிக்கத்தின் அட்டூழியக் கதைகள்
பெல்லட்டுகளின் ரணக் கதைகள்
அத்தனையும் கேட்டு வந்தான்....

மாதங்கள் கழியலாம் 
ஆண்டுகள் போகலாம்
ஆனால் அந்த சவப்பெட்டிக்கு
இறுதி ஆணியை அடிப்போம்!

-சூர்யா, கோவை.