அப்படி நடந்தால்
இப்படியான
கருத்துக் கணிப்புகள்
நடத்துவதற்கு இனிமேல்
உங்கள் ஊடகங்கள்
எதுவுமே மிஞ்சியிருக்காது..
போராட்டங்கள் நடைபெறும்
இடங்களிலெல்லாம் இனி
காவலர்களுக்கு பதிலாக
புல்டோசர்கள் வரிசையாக
அணி வகுத்து நிற்கும்..
களப்போராளிகளும்
கருத்து போராளிகளும்
சிறையில் அடைக்கப்படுவதோடு
சிறையில் சிறுநீர் கழிக்கும்
இடத்தில் கூட CCTV கேமிராவால்
கண்காணிக்கப்படுவார்கள்..
பதற்றம் ஏற்படுகிறபோது
சட்டம் ஒழுங்கை
பாதுகாக்கும் அதிகாரிகளின்
கைகள் இனிமேல்
ஒற்றை கயிற்றால் கட்டப்படும்.
நேர்மையான அதிகாரிகளுக்கு
சிறைகளே வீடுகளாக மாறும்..
அரசை விமர்சிப்பவர்கள்
குற்றவாளிகளாகவும்
குற்றவாளிகள் அமைச்சர்களாகவும்
மிக எளிதாக மாற்றப்படுவார்கள்..
பெரிய பெரிய
ஆலயங்கள் கட்டப்படும்.
ஆனால் பக்தர்கள் யாவரும்
பட்டினியோடு வாழ்வது
எப்படியெனும் அறிவுரைகள்
மனதின் குரலாக எதிரொலிக்கும்..
வாரச் சந்தையைப்போல
கூறுகளாக கட்டப்பட்டு
தேசத்தின் வளங்கள் யாவும்
கூவி கூவி விற்கப்படும்..
அவர்கள் கட்டமைக்க
விரும்புகிற சாம்ராஜ்யத்தின்
எல்லை பரந்து விரிந்ததாக
இருக்கும்.. ஆனால்,
அந்த தேசத்தின்
ஒவ்வொரு சதுர அடியும்
சுதந்திரம் பறிக்கப்பட்ட
மனிதர்களால் நிறைந்திருக்கும்..